மாலியின் வட பகுதியிலிருந்து கிறிஸ்தவர்கள் திட்டமிட்டு வெளியேற்றப்படுகின்றனர்
அக்.27,2012. மேற்கு ஆப்ரிக்க நாடான மாலியின் வட பகுதியிலிருந்து கிறிஸ்தவர்கள் இசுலாம்
தீவிரவாதிகளால் திட்டமிட்டு வெளியேற்றப்பட்டு வருகின்றனர் என்று மறைபோதக அருள்பணியாளர்
ஒருவர் கூறினார். மாலியின் வட பகுதியில் இசுலாம் தீவிரவாதக் குழுக்கள் அமைத்துள்ள
ஆட்சியில் ஷாரியா என்ற இசுலாமியச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது மற்றும் பல கிறிஸ்தவர்கள்
தென் பகுதிக்குச் சென்று விட்டனர் என்று அருள்பணி Laurent Balas கூறினார். கடந்த ஆகஸ்ட்
மாத நிலவரப்படி, மாலி நாட்டின் வடக்கிலிருந்து இரண்டு இலட்சம் கிறிஸ்தவர்கள் Algeria
அல்லது Mauritania விலுள்ள அகதிகள் முகாம்களுக்குச் சென்றுவிட்டனர் எனத் தெரிகிறது. ஆயினும்
இவ்வெண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது எனத் தெரிவித்த அக்குரு, பல முஸ்லீம்களும் தீவிரவாதக்
குழுக்களுக்குப் பயந்து வெளியேறியுள்ளனர் என்று கூறினார்.