இன்றைய ஞாயிறு சிந்தனைக்கு
இரு எண்ணங்களை மையமாக எடுத்துக்கொள்வோம். "பெயர் சொல்லி அழைப்பது", "பார்வை
பெறுவது". மனிதராய் பிறக்கும் ஒவ்வொருவருக்கும் பிறந்த சில நாட்களில் கிடைக்கும்
ஒரு முக்கிய அடையாளம் நமது பெயர். இந்த அடையாளத்தை நாம் வாழ்நாளெல்லாம் கொண்டு செல்கிறோம்.
நம்மை வந்தடையும் பிற அடையாளங்கள் வரும், போகும்... ஆனால், நமது பெயர் நமக்குக் கிடைக்கும்
முதல் மரியாதை. நம்முடன் என்றும் தங்கும் மரியாதை. இந்த மரியாதையைத் தருவதில்தான் நமக்குள்
எத்தனை வேறுபாடுகள்! வேதனை தரும் செயல்பாடுகள்!! வேறு பல தேவையில்லாத எண்ணங்களால் நமது
மனக்கண்கள் பார்வை இழக்கும்போது, ஒருவருக்கு உரிய அடிப்படை மரியாதையையும் வழங்க நாம்
மறுத்துவிடுகிறோம். பெயர் சொல்லி அழைப்பது, பார்வை பெறுவது அல்லது இழப்பது என்ற இவ்விரு
எண்ணங்களும் ஒன்றோடொன்று தொடர்புடைய எண்ணங்கள். இவ்விரு எண்ணங்களையும் இணைத்துச் சிந்திக்க
இன்றைய ஞாயிறு நற்செய்தி நம்மை அழைக்கிறது.
பார்வைத்திறன் அற்ற ஒருவருக்கு இயேசு
பார்வை தந்த புதுமையை நற்செய்தி கூறுகிறது. மாற்கு எழுதியுள்ள இன்றைய நற்செய்தியில் கூடுதலான
ஒரு நல்ல செய்தி என்னவென்றால், பார்வையற்று பிச்சையெடுத்துக் கொண்டிருந்த ஒருவரை மாற்கு
பெயர் சொல்லி குறிப்பிட்டிருக்கிறார். இயேசு ஆற்றிய இறுதிப் புதுமையாக இந்தப் புதுமை
மத்தேயு, மாற்கு, லூக்கா என மூன்று நற்செய்திகளிலும் சொல்லப்பட்டிருக்கிறது. மாற்கு மட்டும்,
பார்வை இழந்த பிச்சைக்காரருக்குப் பெயர், முகவரி எல்லாம் தந்திருக்கிறார். திமேயுவின்
மகன் பர்த்திமேயு என்பது அவர் பெயர். இம்மூன்று நற்செய்திகளிலும் இயேசு ஆற்றிய புதுமைகளில்
பெயர் குறிப்பிடப்பட்டுள்ள ஒரே புதுமை இது மட்டுமே. மற்ற புதுமைகளிலெல்லாம், முடவர்,
பார்வையற்றவர், தொழுநோயாளி என்று பொதுவாகச் சொல்லப்பட்டுள்ளது.
பெயர் சொல்லி அழைப்பதிலேயே,
இரு விதங்கள்... இரு பக்கங்கள். ஒருவருக்குரிய உண்மை மதிப்பளித்து பெயரோ, அடைமொழியோ சொல்லி
அழைக்கும் ஒளிமயமான பக்கம். ஒருவர் அவமானத்தால் குறுகிப் போகும் வண்ணம் பெயரோ அடைமொழியோ
சொல்லி அழைக்கும் இருள் சூழ்ந்த பக்கம். ஒரு சிலருக்கு அவர்கள் செய்யும் தொழில் அவர்களது
அடையாளங்களாக மாறிவிடும். செய்யும் தொழில் உயர்வான தொழிலாக இருந்தால், அந்த அடையாளங்களை
நாம் மகிழ்வோடு ஏற்றுகொள்வோம். எடுத்துக்காட்டாக, மருத்துவத் தொழிலில் இருப்பவர்களைப்
பெயர் சொல்லி அழைப்பதைவிட "டாக்டர்" என்று சொல்லும்போது கூடுதலான மரியாதை. இதேபோல், ஆசிரியர்,
பேராசிரியர், காவல்துறை கண்காணிப்பாளர்களை, teacher, professor, inspector என்றெல்லாம்
அழைக்கும்போது சொல்வதற்கும் பெருமையாக இருக்கும், கேட்பதற்கும் பெருமையாக இருக்கும்.
மதம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களையும் தனிப்பட்ட பெயர் சொல்லி அழைப்பதை விட மரியாதையான
அடைமொழிகளால் அழைப்பதுதான் அதிகமாய் பழக்கத்தில் உள்ளது. Father, Brother, Sister, சாமி,
குருவே... இப்படி பல பட்டங்கள். இவைபோன்ற அடைமொழிகள் ஒருவரைத் தலைநிமிர்ந்து நிற்கவைக்கும்.
பெயர் சொல்லி அழைப்பதன் ஒளிநிறைந்த பக்கம் இது.
இனி சிந்திக்க இருப்பது இருளான
பக்கம். நாம் வாழும் சமுதாயத்தில், தெருவை சுத்தம் செய்வோர், காலணி தைப்பவர், வீட்டு
வேலை செய்பவர்... இவர்களை நாம் எப்படி அழைக்கிறோம்? தொழிலால் வரும் அடைமொழிகள் இவர்களுக்குக்
கிடையாது. அப்படியே அந்த அடைமொழிகளைப் பயன்படுத்தும்போது அதில் மரியாதை ஒலிக்காது. அவர்களின்
பெயர்களும் யாருக்கும் தெரிவதில்லை. அவர்கள் எல்லாருமே "ஏய், டேய், அடியே, இவளே..." என்ற
ஏக வசனங்களுக்கு ஆளானவர்கள். இந்திய சமுதாயம் தேடிக்கொண்ட மற்றொரு சாபம் சாதி முறைகள்.
இதன் அடிப்படையில் ஒரு சிலர் அவர்கள் பிறந்த குலத்தின் பெயரிடப்பட்டு கேவலமாக அழைக்கப்படுகின்றனர்.
இவை இருள் சூழ்ந்த பக்கங்கள்... நம்மைக் குருடாக்கும் பழக்கங்கள்.
நான் பணி செய்து
வந்த ஒரு அலுவலகத்தில் எங்களுக்குக் காபி கொண்டுவரும் ஒரு இளைஞர் என் நினைவுக்கு வருகிறார்.
மற்ற எல்லாரும் அவரைக் கூப்பிட்ட ஒரே பெயர் "டேய்". நான் அவரது பெயரைக் கற்றுக்கொண்டு
"சங்கர்" என்று அழைத்தேன். என்னைப் பார்க்கும் போதெல்லாம் அந்த இளைஞர் முகத்தில் புன்னகை.
என்னைத் தனிப்பட்ட விதத்தில் கவனித்துக் கொள்வார். அவரிடம் அந்த சலுகையைப் பெறுவதற்காக
நான் அவரைப் பெயர் சொல்லி அழைக்கவில்லை. அவரை "சங்கர்" என்று அழைக்கும்போது, அவர் தோள்களை
உயர்த்தி சிரித்தது எனக்கு முக்கியமாகப் பட்டது. நான் தங்கியிருந்த குருக்கள் இல்லங்களில்
எளிய பணி செய்யும் எல்லாருடைய பெயரையும் கற்றுக் கொள்வதற்கு முயற்சி செய்வேன். அவர்களைப்
பெயர் சொல்லி அழைப்பதனால், நான் எந்த வகையிலும் குறைந்து போய் விடவில்லை. மாறாக, அவர்கள்
நிமிர்ந்து நின்றதை, நிறைவாகச் சிரித்ததை இரசித்துப் பார்த்திருக்கிறேன். வாழ்வின் எந்த
நிலையில் ஒருவர் இருந்தாலும், முக்கியமாக, சந்தர்ப்பச் சூழல்களால் வாய்ப்புக்களும், வசதிகளும்
இன்றி எளிய பணிகள் செய்பவரைப் பெயர்சொல்லி அழைக்கும்போது, உள்ளூர பல புதுமைகள் நடக்கும்.
முயன்று பார்ப்போம்.
பார்வை பெற வேண்டும்... இது நமது இரண்டாவது சிந்தனை.
உடல் பார்வை பெற விழைந்தார் பர்த்திமேயு. ஆனால், உள்ளத்தில் அவர் ஏற்கனவே தெளிவான பார்வை
பெற்றிருந்தார். இயேசுவை உள்ளத்துக் கண்களால் "தாவீதின் மகன்" என்று பார்த்திருந்தார்.
விவிலியத்தில் இந்தப் பட்டத்தை முதன்முதலில் இயேசுவுக்குத் தந்தது உடலளவில் கண் பார்வையற்று,
ஆனால் உள்ளத்தளவில் பார்வை பெற்ற பர்த்திமேயு. அகக்கண்களால் ஆழமான உண்மைகளைப் பார்க்கமுடியும்
என்பதற்கு பர்த்திமேயு நல்லதோர் எடுத்துக்காட்டு. கண் பார்வை இல்லாமல், காது கேளாமல்,
வாய் பேசாமல் இருந்த ஹெலன் கெல்லெர் கூறிய அழகான சொற்கள்: “The most beautiful things
in the world can’t be seen or even touched. They must be felt with the heart.” "உலகில்
மிக அழகானவைகளைக் கண்ணால் காண முடியாது, தொட்டும் உணர முடியாது. உள்ளத்தால் மட்டுமே உணரமுடியும்."
அகக்கண்
கொண்டு பார்க்கும் விந்தையைச் சொல்லும் எத்தனையோ கதைகள் உண்டு. இதோ இன்னொரு கதை. மருத்துவமனை
ஒன்றில் இருவர் ஒரே அறையில் தங்கி இருநதார்கள். இருவரும் ஏறக்குறைய படுத்த படுக்கையாய்
இருந்த நோயாளிகள். இவ்விருவரில் ஒருவருடைய படுக்கை ஜன்னலுக்கு அருகில் இருந்தது. அவர்
ஒவ்வொரு நாள் மதியமும் மிகவும் சிரமப்பட்டு தன் படுக்கையில் எழுந்து ஒரு மணி நேரம் அமர்ந்திருப்பார்.
அந்த ஒரு மணி நேரமும் ஜன்னல் வழியே அவர் பார்ப்பதையெல்லாம் வர்ணிப்பார். பக்கத்திலிருக்கும்
பூங்கா, அங்கு விளையாடும் குழந்தைகள், அங்குள்ள சிறு குளத்தில் நீந்திவரும் அன்னப்பறவைகள்
என்று அவர் வர்ணனை ஒரு மணி நேரம் நடக்கும். அடுத்த படுக்கையில் இருந்தவருக்கு அந்த ஒரு
மணி நேரம் போவதே தெரியாது. நாள் முழுவதும், படுத்தபடியே, விட்டத்தை மட்டும் பார்த்துவந்த
அவர் அந்த ஒரு மணி நேரம் கண்களை மூடி, அடுத்தப் படுக்கைக்காரர் சொல்லும் வர்ணனை வழியாக
வெளி உலகத்தைப் பார்த்தார். இது பத்து நாட்கள் நடந்தன. அடுத்த நாள் காலை, ஜன்னலருகே
படுத்திருந்தவர் எழவில்லை. முந்திய இரவு தூக்கத்திலேயே அமைதியாக அவர் இறந்து போனார்.
அடுத்த படுக்கையில் இருந்தவருக்கு ஆழ்ந்த வருத்தம். அவரது கண்கள் வழியே அவர் தந்த வர்ணனை
வழியே தான் ஒரு மணி நேரமாவது பார்த்து வந்த உலகம் இப்போது மூடப்பட்டுவிட்டதே என்று இன்னும்
அதிக வருத்தம். இறந்த தன் நண்பரை அவர்கள் எடுத்துச் சென்றபின், காலியாகக் கிடந்த அந்தப்
படுக்கை அவரது துயரத்தை இன்னும் கூட்டியது. இரு நாட்கள் சென்றபின், நர்ஸிடம் வேண்டிக்
கேட்டு, அந்த ஜன்னலருகே இருந்த படுக்கைக்குத் தன்னை மாற்றச் சொன்னார். மாற்றப்பட்டார்.
மதிய நேரம் நர்ஸிடம், "தயவுசெய்து நான் கொஞ்ச நேரம் அமர்ந்திருக்க உதவுங்களேன்." என்று
கேட்டார். நர்ஸ் உதவியோடு எழுந்து அமர்ந்தார். ஜன்னல் வழியே வெளி உலகைப் பார்க்க முயன்றவருக்கு
பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. ஜன்னல் வழியே அவர் பார்த்ததெல்லாம் ஒரு வெற்றுச் சுவர்.
பூங்கா இல்லை, குழந்தைகள் இல்லை.. ஒன்றும் இல்லை. அவருடைய அதிர்ச்சியைப் பார்த்த நர்ஸ்
அவரிடம் விவரம் கேட்டார். அப்போது அவர், எப்படி இந்த படுக்கையில் இருந்தவர் ஜன்னல் வழியே
பார்த்ததை விவரிப்பார் என்று விளக்கினார். இதைக்கேட்டதும் அந்த நர்ஸ் சொன்ன செய்தி அவருக்கு
மேலும் அதிர்ச்சியைத் தந்தது. இதுவரை அந்தப் படுக்கையில் இருந்தவர் அந்த வெற்றுச் சுவரையும்
பார்த்திருக்க வாய்ப்பில்லை, ஏனெனில், அவருக்கு பார்வைத்திறனே கிடையாது. நர்ஸ் சொன்னது
அவரை அதிர்ச்சியில் உறையச் செய்தது. கண்பார்வை உள்ள அவர் ஒவ்வொருநாளும் ஒரு மணி நேரமாகிலும்
ஓர் அழகான உலகைப் பார்க்க கண் பார்வை அற்ற ஒருவர் உதவியதை உணர்ந்தார்.
பார்க்கும்
திறன் இருந்தால் மட்டும் போதாது. பார்வை பெற வேண்டும். சரியான பார்வை பெற வேண்டும். ஜன்னலை
வைத்து இன்னொரு கதை. கணவனும், மனைவியும் ஒரு வீட்டுக்கு குடி வநதனர். தினமும் அந்தப்
பெண்மணி, காலையில் காபி அருந்திக்கொண்டே, தன் வீட்டு கண்ணாடி ஜன்னல் வழியே அடுத்த வீட்டில்
வேலை செய்யும் பெண் துணிகளைக் காய வைப்பதைப் பார்த்து, "ச்சே, அந்தம்மாவுக்கு சரியா துணி
துவைக்கத் தெரியல. துவச்ச பிறகும் பாருங்க அந்தத் துணியெல்லாம் எவ்வளவு அழுக்கா இருக்கு.."
என்று கணவனிடம் முறையிட்டார். முறையீடுகள் மூன்று நாட்கள் தொடர்ந்தன. நான்காம் நாள் காலையில்
வழக்கம் போல் ஜன்னல் வழியே பார்த்து குறை சொல்ல நினைத்த பெண்மணிக்கு ஒரே ஆச்சரியம். "இந்தாங்க,
இங்க வாங்களேன்" என்று கணவனை அவசரமாக அழைத்து, "அங்க பாருங்க. நான் மூணு நாளா சொல்லிகிட்டிருந்தது
அந்த அம்மா காதுல விழுந்திருச்சின்னு நினைக்கிறேன். இன்னக்கி அந்தத் துணியெல்லாம் சுத்தமா
இருக்கு." என்று வியந்து பாராட்டினார். கணவன் அமைதியாக, "அடுத்த வீட்டுலே ஒன்னும்
குறை இல்ல. இன்னக்கி நம்ம ஜன்னல் கண்ணாடியை நான் காலையில எழுந்து சுத்தமாகினேன்." என்று
சொன்னாராம்.
பார்வை பெற வேண்டும்... அழுக்கில்லாத, களங்கமில்லாத பார்வை பெற வேண்டும்...
தெளிவான, சரியான பார்வை பெற வேண்டும்... பார்வைகளைச் சீர்படுத்தி, அடுத்தவரைச் சரியான
கண்ணோட்டத்தில் காணவும், அவர்களுக்கு உரிய மரியாதையைத் தரும் வகையில் அவர்களைப் பெயரிட்டு
அழைக்கவும் இறைவன் நம் உள்ளத்தைத் தூய்மையாக்க வேண்டுவோம்.