திருத்தந்தை : குருத்துவக் கல்லூரிகள், குருக்கள் பேராயத்துக்குக் கீழ் செயல்படும்
அக்.27,2012. குருத்துவக் கல்லூரிகள், குருக்கள் பேராயத்துக்குக் கீழும், மறைக்கல்விகள்,
புதிய நற்செய்தி அறிவிப்புப்பணியை ஊக்குவிக்கும் திருப்பீட அவையின் கீழும் இனிமேல் இயங்கும்
என்பதை இச்சனிக்கிழமையன்று அறிவித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். இச்சனிக்கிழமை
காலையில் தொடங்கிய புதிய நற்செய்தி அறிவிப்புப்பணி குறித்த 13வது உலக ஆயர்கள் மாமன்றத்தின்
22வது பொது அமர்வின் இறுதியில் இதனை அறிவித்தார் திருத்தந்தை. 252 மாமன்றத் தந்தையர்
பங்கு பெற்ற இப்பொது அமர்வில் அனைவருக்கும் நன்றி தெரிவித்த திருத்தந்தை, குருத்துவக்
கல்லூரிகளை நிர்வகிக்கும் பொறுப்பு, கத்தோலிக்கக் கல்விப் பேராயத்திலிருந்து எடுக்கப்பட்டு
குருக்கள் பேராயத்திடமும், மறைக்கல்விகளை நடத்தும் பொறுப்பு, குருக்கள் பேராயத்திலிருந்து
எடுக்கப்பட்டு புதிய நற்செய்தி அறிவிப்புப்பணியை ஊக்குவிக்கும் திருப்பீட அவையிடமும்
கொடுக்கப்படுவதாகக் கூறினார். ஆழ்ந்த செபம் மற்றும் சிந்தனைகளுக்குப் பின்னர் இதனை
அறிவிப்பதாகவும், இந்த மூன்று துறைகளும் தங்களது பணிகளைத் திறம்படச் செய்யும் எனத் தான்
நம்புவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், புதிய கர்தினால்களாக அறிவிக்கப்பட்டிருப்பவர்களுக்கு
நன்றி தெரிவித்த திருத்தந்தை, இத்துடன் கடந்த பிப்ரவரியின் கர்தினால்கள் அவை முழுமை அடைகின்றது
என்றும் கூறினார். மேலும், இச்சனிக்கிழமையன்று இம்மாமன்ற விரிவுரையாளர் வாஷிங்டன்
பேராயர் கர்தினால் Donald William WUERL, இம்மாமன்றத்தின் சிறப்புச் செயலர் பிரான்சின்
Montpellier பேராயர் Pierre Marie CARRÉ, திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்தந்தை
பெதரிக்கோ லொம்பார்தி ஆகியோர் ஆங்கிலம், ப்ரெஞ்ச், இத்தாலியம் ஆகிய மொழிகளில், மாமன்றத்
தந்தையரின் பரிந்துரைகள் குறித்து நிருபர் கூட்டத்தில் விளக்கினர். மாமன்றத் தந்தையரின்
பரிந்துரைகளின் அதிகாரப்பூர்வ இறுதிப் பட்டியல், உலக ஆயர்கள் மாமன்ற விதிமுறைகளின்படி
இலத்தீனில் இருக்கும், ஆனால், திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் அனுமதியின்பேரில்,
தற்போது இது ஆங்கிலத்திலும் இடம்பெற்றுள்ளது என்று இந்நிருபர் கூட்டத்தில் கூறப்பட்டது.
இந்தப் பரிந்துரைகள் திருத்தந்தையிடம் கொடுக்கப்பட வேண்டும் என்ற விதிமுறையும் உள்ளது
எனவும் கூறப்பட்டது. வத்திக்கானில் இம்மாதம் 7ம் தேதி தொடங்கிய இந்த 13வது உலக ஆயர்கள்
மாமன்றம், இஞ்ஞாயிறன்று திருத்தந்தை நிகழ்த்தும் திருப்பலியோடு நிறைவடையும்.