நமது வாழ்நாட்களுக்குள் உலகிலிருந்து பசியை முற்றிலும் ஒழிக்க உறுதி எடுக்க வேண்டும்
- FAOவின் இயக்குனர்
அக்.25,2012. நமது வாழ்நாட்களுக்குள் உலகிலிருந்து பசியை முற்றிலும் ஒழிக்க அனைத்து நாட்டு
அரசுகளும், உணவு உற்பத்தி நிறுவனங்களும் உறுதி எடுக்க வேண்டும் என்று ஐ.நா.வின் உணவு
மற்றும் வேளாண்மை நிறுவனமான FAOவின் இயக்குனர் José Graziano da Silva கூறினார். Slow
Food International என்ற அமைப்பினரால் ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படும் கருத்தரங்கு, இத்தாலியின்
Turin நகரில் இவ்வியாழன் முதல் வருகிற திங்கள் முடிய நடைபெறுகிறது. இக்கருத்தரங்கின்
துவக்க அமர்வில் உரையாற்றிய Graziano da Silva, பட்டினியால் வாடும் குழந்தைகளைக் காப்பது
நமது தலைமுறையினரின் அவசரமான சவால் என்று கூறினார். உலகில் 50 கோடி மக்கள் பசியால்
வாடும்போது, ஒவ்வோர் ஆண்டும் உலகில் உற்பத்தியாகும் உணவில் மூன்றில் ஒரு பகுதி வீணாக்கப்படுகிறது
என்பதை FAO இயக்குனர் சுட்டிக்காட்டினார். உலகில் பசியால் வாடுவோரின் எண்ணிக்கை பூஜ்யமாவது
நமது கையில் உள்ளது என்பதை ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் வலியுறுத்திக் கூறினார். Slow
Food International என்ற அமைப்பில் 130 நாடுகளைச் சேர்ந்த 1,00,000க்கும் அதிகமானோர்
உறுப்பினர்களாய் உள்ளனர். இயற்கை சார்ந்த வேளாண்மை முறைகளில் உணவு தயாரிக்கப்படும் முறைகளை
இவ்வுறுப்பினர்கள் உலகெங்கும் தெளிவாக்கி வருகின்றனர்.