‘அணு சக்தியில்லாத அமைதி உலகம்’ என்ற கருத்தில் ஐ.நா நடத்திய
ஓவியப் போட்டி
அக்.24,2012. அணு சக்தியற்ற உலகை நமது இளைய தலைமுறையினருக்கு உருவாக்குவதில் நான் பெருமளவு
நேரத்தைச் செலவழிக்கிறேன் என்று ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன் கூறினார். ‘அணு சக்தியில்லாத
அமைதி உலகம்’ என்ற கருத்தில் இளையோர் மத்தியில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற
12 பேருக்கு இச்செவ்வாயன்று நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் பரிசுகள் வழங்கிய
பான் கி மூன் இவ்வாறு கூறினார். 5 வயதுக்கும் 17 வயதுக்கும் இடைபட்டோருக்கென நடத்தப்பட்ட
இப்போட்டியில் 92 நாடுகளைச் சேர்ந்த 6600க்கும் அதிகமான இளையோர் பங்கேற்றனர். 140 நடுவர்கள்
அடங்கிய குழு ஒன்று சிறந்த ஓவியங்களைத் தேர்ந்தெடுத்த்து. 5 முதல் 8, 9 முதல் 12 மற்றும்
13 முதல் 17 வயதுக் குழுக்களாகப் பிரிக்கப்பட்ட இவ்விளையோரில் 12 பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டியில்
பங்கேற்ற அனைத்து இளையோரும் அணு ஆயுதங்களற்ற, அமைதியான உலகை விரும்புவதாகக் கூறியது,
தன்னைப் பெரிதும் கவர்ந்தது என்றும், அமைதிக்காக உழைக்கும் ஆர்வத்தைத் தனக்குள் இன்னும்
அதிகரித்தது என்றும் ஐ.நா.பொதுச் செயலர் பரிசளிப்பு விழாவில் கூறினார். வருகிற ஆண்டுக்கென
ஐ.நா.அவை உருவாக்கும் நாட்காட்டியில் பரிசு பெற்ற 12 ஓவியங்களும் பிரசுரமாகும் என்று
ஐ.நா. அறிக்கை கூறுகிறது.