இந்தியாவில் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த செங்கற் கட்டடக் கலையின் நுட்பங்கள்
அக்.22,2012. பழமைவாய்ந்த செங்கற் கட்டடக் கலையின் நுட்பங்களை, இன்றையக் கட்டடங்களில்
பயன்படுத்தினால், காலத்தால் அழியாத உறுதியான கட்டடங்களை உருவாக்கமுடியும் என, தொல்லியல்
அறிஞர் சத்தியமூர்த்தி கூறினார். பழமைவாய்ந்த செங்கற் கட்டட கலை பற்றிய கருத்தரங்கம்
தொல்லியல் துறையில் சமீபத்தில் நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய, தொல்லியல் துறையின்
ஓய்வு பெற்ற கண்காணிப்பாளர், முனைவர். சத்தியமூர்த்தி, பேசியபோது, சங்க காலம் முதலே,
செங்கற்களை கொண்டு கட்டடங்கள் கட்டப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன என்று கூறினார். கட்டடங்களுக்குத்
தகுந்த வகையில் செங்கற்கள் தயாரிக்கப்பட்டு கட்டுவதே பண்டைய தொழில் நுட்பம். இதனால்,
பல வடிவங்களில், விதவிதமான செங்கற்கள் தயாரிக்கப்பட்டன என்றும் அவர் விளக்கினார். தற்போது,
நாம் பயன்படுத்தும் செங்கற்களை, கட்டடத்தின் வளைவு பகுதிகளுக்கு ஏற்ப, உடைத்து தான் பயன்படுத்துகிறோம்.
இம்முறையினால் தான், வீடுகள் உறுதி தன்மையின்றி, விரிசல் விடுகின்றன என்றும், பண்டைய
செங்கற் கட்டடக் கலையின் நுணுக்கங்களை, இன்றையக் கட்டடங்களில் பயன்படுத்தினால், அழியாத
பல கட்டடங்களை உருவாக்கலாம். இவ்வாறு, சத்தியமூர்த்தி எடுத்துரைத்தார்.