2012-10-20 15:30:10

பெய்ரூட்டில் குண்டு வெடிப்பில் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்குத் திருத்தந்தை அனுதாபம்


அக்.20,2012. லெபனன் தலைநகர் பெய்ரூட்டில் இவ்வெள்ளி பிற்பகலில் இடம்பெற்ற சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பில் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் குடும்பங்களுக்குத் திருத்தந்தை தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் செபங்களையும் தெரிவித்துள்ளார்.
லெபனன் மாரனைட்ரீதி முதுபெரும் தலைவர் Béchara Boutros Raïக்குத் திருத்தந்தையின் பெயரில் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சிசியோ பெர்த்தோனே அனுப்பியுள்ள இரங்கல் தந்தியில் திருத்தந்தையின் செபங்களும் அனுதாபங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
மக்களுக்குப் பெருந்துயரங்களை ஏற்படுத்தும் வன்முறைக்கு எதிராக லெபனன் நாட்டுக்கான அண்மைத் திருப்பயணத்தின்போது கண்டனம் தெரிவித்தது போல, இப்போது இடம்பெற்றுள்ள இந்த வன்முறைக்குத் திருத்தந்தை கடும் கண்டனம் தெரிவிப்பதாகவும், லெபனனிலும் மத்திய கிழக்குப் பகுதி முழுவதிலும் அமைதியும் ஒப்புரவும் ஏற்பட வேண்டுமென மீண்டும் வலியுறுத்துவதாகவும் அச்செய்தி கூறுகிறது.
பெய்ரூட்டில் கிறிஸ்தவர்கள் அதிகமாக வாழும் Ashrafiya பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்தபோது அங்கு நின்றிருந்த காரில் வைக்கப்பட்டிருந்த குண்டு திடீரென வெடித்துச் சிதறியதில் எட்டுப்பேர் உயிரிழந்தனர் மற்றும் 78க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
மேலும், இந்தக் குண்டுவெடிப்பு வன்முறை அறிவற்ற செயல் என்று திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தியும் இவ்வெள்ளியன்று கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதேவேளை இத்தாக்குதலில் லெபனனின் உள்நாட்டுப் பாதுகாப்புப் படைகளின் புலனாய்வுத் தலைவர் ஒருவர் கொல்லப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
ஏற்கனவே சிரியாவில் நடைபெற்றுவரும் உள்நாட்டுப் போர் காரணமாக லெபனனிலும் பதட்டம் அதிகரித்திருப்பதும், கடந்த நான்கு ஆண்டுகளில் லெபனனில் இடம்பெற்றிருக்கும் மிகப்பெரிய கார் குண்டுத் தாக்குதல் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த வன்முறைக்குச் சிரியா காரணம் என, லெபனனிலுள்ள சிரியாவுக்கு எதிரான அரசியல்வாதிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.







All the contents on this site are copyrighted ©.