தமிழ்நாட்டில் இந்த ஆண்டு டெங்கு உயிர்பலி நான்குமடங்கானது
அக்.19,2012. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் இந்த ஆண்டு டெங்கு காய்ச்சலில் அதிகம்
பேர் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருப்பதாக இந்திய நடுவணரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த
2012ம் ஆண்டில் இதுவரை தமிழ்நாட்டில் 5,376 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அவர்களில்
நாற்பதுக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்திருப்பதாக நடுவணரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த
இரண்டு ஆண்டுகளில் தமிழ்நாட்டைத் தாக்கிய டெங்கு காய்ச்சலின் பாதிப்புக்களுடன் ஒப்பிடும்போது,
இவ்வாண்டில் இப்பாதிப்பு இரண்டு மடங்கு அதிகரித்திருப்பதாகவும், உயிரிழப்புக்கள் நான்குமடங்கு
அதிகரித்திருப்பதாகவும் அந்தப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. மேலும், தென்னிந்தியாவின்
பிற மாநிலங்களான கேரளா, ஆந்திரா மற்றும் கர்னாடகாவின் புள்ளிவிவரங்களுடன் ஒப்பிடும்போதுகூட
தமிழ்நாட்டில் இக்காய்ச்சலின் தாக்குதல் இரண்டு மடங்காகவும், உயிரிழப்புக்கள் நான்கு
முதல் ஐந்து மடங்காகவும் இருப்பதாகத் தெரிய வருகிறது. கொசுக்களினால் பரவும் இந்த டெங்கு
காய்ச்சல் பாதித்தால், உடம்பில் நீர்ச்சத்துக் குறைந்து உடம்பு வலி ஏற்படும். இந்தக்
காய்ச்சலுக்கு மருத்துவத்துறையால் அங்கரீக்கப்பட்ட எந்த ஊசி மருந்தும் சிகிச்சையும் கிடையாது
எனச் சொல்லப்படுகிறது.