அக்.18,2012. திருஅவையின் கலாச்சாரப் பாரம்பரிய வளங்களுக்கானத் திருப்பீட ஆணையம், வருகிற
நவம்பர் 3ம் தேதியன்று திருப்பீட கலாச்சார அவையுடன் இணைக்கப்பட்டு ஒரே திருப்பீட அவையாகச்
செயல்படத் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 30ம் தேதி திருத்தந்தையால்
அங்கீகரிக்கப்பட்ட அப்போஸ்தலிக்க அறிக்கையின்படி திருஅவையின் கலாச்சாரப் பாரம்பரிய வளங்களுக்கானத்
திருப்பீட ஆணையம், திருப்பீட கலாச்சார அவையுடன் இணைக்கப்படுகிறது. இது வருகிற நவம்பர்
3ம் தேதியிலிருந்து அமலுக்கு வருகிறது. இவ்விணைப்பு குறித்துப் பேட்டியளித்த திருப்பீட
கலாச்சார அவைத் தலைவர் கர்தினால் ஜான்பிராங்கோ ரவாசி, கலையும் விசுவாசமும், மனிதர் திட்டங்களும்
தூயஆவியின் செயல்களும், பேருண்மையும் அடையாளங்களும் ஒன்றோடொன்று தொடர்புடையன, இவை திருஅவையின்
வரலாற்றில் பிரிக்கமுடியாதவைகளாக இருந்து வருகின்றன எனக் கூறினார். கலையும் விசுவாசமும்
எவ்வாறு சகோதரிகளாக இருக்கின்றன என்பது குறித்தும் கர்தினால் ரவாசி விளக்கினார்.