நம்பிக்கை ஆண்டில் அவரவர் தனிப்பட்ட வாழ்வையும், பொது வாழ்வையும் உயர்த்தும்
முயற்சிகளில் ஈடுபடவேண்டும் - இலங்கை கர்தினால் மால்கம் இரஞ்சித்
அக்.17,2012. நாம் வாழும் சமுதாயத்தை உயர்த்துவதில் கத்தோலிக்கர்களின் பொறுப்பை மீண்டும்
நமக்கு நினைவுறுத்தும் ஒரு காலம் இந்த நம்பிக்கை ஆண்டு என்று இலங்கை கர்தினால் மால்கம்
இரஞ்சித் கூறினார். கொழும்புவின் Kotahena பேராலயத்தில் நம்பிக்கை ஆண்டைத் துவக்கிவைக்கும்
திருப்பலியில் மறையுரையாற்றிய கொழும்புப் பேராயர் கர்தினால் இரஞ்சித், கூடியிருந்த குருக்கள்,
இருபால் துறவியர், பொது நிலையினர் அனைவரும் இந்த நம்பிக்கை ஆண்டில் அவரவர் தனிப்பட்ட
வாழ்வையும், பொது வாழ்வையும் உயர்த்தும் முயற்சிகளில் ஈடுபடவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். திரு
அவை வழங்கியுள்ள இந்த அருள் நிறைந்த தருணத்தில், கருக்கலைப்பு, போதைப் பொருள்களுக்கு
அடிமையாதல் போன்ற பல்வேறு சவால்களுக்குத் தீர்வுகள் காணவும், வளரும் குழந்தைகளுக்குத்
திருஅவையின் தெளிவான போதனைகளைக் கற்றுத்தரவும் இந்த நம்பிக்கை ஆண்டு நம்மை அழைக்கிறது
என்று கர்தினால் இரஞ்சித் கூறினார்.