2012-10-17 11:24:09

திருத்தந்தையின் புதன் பொதுமறைபோதகம்


அக். 17, 2012. அன்பு நெஞ்சங்களே! கடந்த ஞாயிறன்று திரு அவையில் "நம்பிக்கையின் ஆண்டை' துவக்கி வைத்த திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இப்புதன் மறைபோதகத்தில் நம்பிக்கை ஆண்டு குறித்த புதிய தொடர் ஒன்றைத் துவக்கினார்.
RealAudioMP3 இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின் 50ம் ஆண்டை சிறப்பித்து வரும் இவ்வேளையில் இடம்பெற்றுவரும் நம்பிக்கையின் ஆண்டு குறித்த திருஅவைக்கொண்டாட்டங்களுடன் இணங்கிச்செல்லும் விதமாக இன்றைய புதன் மறைபோதகத்திலிருந்து, புதிய தொடர் ஒன்றை துவக்குகிறேன். இயேசுகிறிஸ்துவின் மீதான விசுவாசம் எனும் கொடையில் புதுப்பிக்கப்பட்ட ஆர்வம் கொண்டிருக்க இந்த நம்பிக்கையின் ஆண்டு நமக்கு அழைப்பு விடுக்கிறது. இறைமகன் இயேசு கிறிஸ்து, நம் இவ்வுலக வாழ்வின் இறுதி நோக்கை நமக்குக் காட்டுகிறார். விசுவாசம் நம் வாழ்வை மாற்றி அமைக்கிறது, நம்மைப் படைத்த இறைவனை அறியவும் அன்புகூரவும் உதவுகிறது. அவரின் விருப்பத்திற்கு இயைந்த வகையில் சுதந்திரமாக வாழவும், உண்மையான மனிதாபிமான மற்றும் சகோதரத்துவ சமூகத்தைக் கட்டியெழுப்புவதில் ஒத்துழைக்கவும் அந்த விசுவாசம் உதவுகிறது. நம் இந்தப் புதன் பொதுமறைபோதகத்தொடர், அப்போஸ்தலிக்க விசுவாச அறிக்கையின் வார்த்தைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ள விசுவாச மைய உண்மைகளைக் குறித்து எடுத்துரைப்பதாக இருக்கும். இயேசுவின் மறையுண்மைகள் பற்றிய முழு அறிவை நோக்கிச் செல்லவும், இயேசுவின் உடலாம் திரு அவையின் வாழ்வில் ஆழமாகப் பங்குகொள்வதற்கும் இந்த நம்பிக்கையின் ஆண்டு அனைத்து விசுவாசிகளையும் வழிநடத்திச்செல்வதாக.
இவ்வாறு தன் புதன் மறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், ஆஸ்திரேலியாவிலிருந்து வந்திருந்த இசுலாமிய-கத்தோலிக்க கல்விக்குழு மற்றும் வட அமெரிக்க யூதக் கூட்டமைப்பு உட்பட அனைத்துத் திருப்பயணிகளையும் வாழ்த்தி அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.








All the contents on this site are copyrighted ©.