விசுவாச ஆண்டுக்குப் பன்னாட்டு இறையியல் கழகத்தின் செய்தி
அக்.16,2012. விசுவாச ஆண்டுக்கு மையமாக அமைந்துள்ள மனமாற்றத்துக்காக உழைக்கவும், திருஅவைக்குச்
செய்யும் தனது பணியின் அர்ப்பணத்தைப் புதுப்பிக்கவும் இந்த விசுவாச ஆண்டில் விரும்புவதாக
பன்னாட்டு இறையியல் கழகம் அறிவித்துள்ளது. இந்த அக்டோபர் 11ம் தேதி தொடங்கியுள்ள விசுவாச
ஆண்டை முன்னிட்டு செய்தி வெளியிட்டுள்ள இந்த இறையியல் கழகம், புதிய நற்செய்தி அறிவிப்புப்பணிக்குத்
திருப்பீடத்துக்கு அனைத்து உதவிகளைச் செய்யவிருப்பதாகவும் அறிவித்துள்ளது. இறையியலாளர்,
விசுவாசத்தின் சாரத்தை இன்னும் அதிக ஆழமாய்ப் புரிந்து கொள்வது மட்டுமல்லாமல், முழு சுதந்திரத்துடன்
இறைவனுக்குத் தங்களை அர்ப்பணிக்கவும் செய்கின்றனர் எனவும் அச்செய்தி கூறுகிறது. பன்னாட்டு
இறையியல் கழகத்தை வழிநடத்தும் திருப்பீட விசுவாசப்பரப்புப் பேராயத் தலைவர் பேராயர் Gerhard
Müller, இக்கழகத்தின் ஆண்டுக்கூட்டத்தின்போது வருகிற டிசம்பர் 6ம் தேதி உரோம் புனித மேரி
மேஜர் பசிலிக்காவுக்குத் திருப்பயணம் மேற்கொண்டு, இந்த விசுவாச ஆண்டில் இக்கழகம் செய்யவிருக்கும்
பணிகளை அன்னைமரியாவிடம் அர்ப்பணிப்பார் என்றும் அச்செய்தி கூறுகிறது.