உலகில் 87 கோடிப் பேர் ஊட்டச்சத்துக் குறையுள்ளவர்கள், ஐ.நா.அறிக்கை
அக்.10,2012. உலகில் ஏறத்தாழ 87 கோடிப் பேர் அதாவது எட்டுப் பேருக்கு ஒருவர் வீதம் கடும்
ஊட்டச்சத்துப் பற்றாக்குறையால் துன்புறும்வேளை, உலகில், குறிப்பாக வளரும் நாடுகளில் பசிப்
பிரச்சனையைத் தீர்ப்பதற்கு உடனடி நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன என்று இச்செவ்வாயன்று
ஐ.நா. வெளியிட்ட புதிய அறிக்கை ஒன்று கூறுகிறது. ஊட்டச்சத்துப் பற்றாக்குறையால் துன்புற்றவர்களின்
எண்ணிக்கை கடந்த 20 ஆண்டுகளில் சிறிது குறைந்துள்ளதாகக் கூறிய இப்புதிய அறிக்கை, கடந்த
20 ஆண்டுகளைப் போலவே தொடர்ந்து 2015ம் ஆண்டுவரை ஒவ்வோர் ஆண்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டால்
வளரும் நாடுகளில் ஊட்டச்சத்துப் பற்றாக்குறையுள்ளவர்களை 12.5 விழுக்காடாகக் குறைக்கலாம்
என்றும் கூறுகிறது. இன்றைய உலகில் இவ்வளவு தொழில்நுட்ப மற்றும் பொருளாதார வாய்ப்புகள்
இருக்கின்றபோதிலும், 5 வயதுக்குட்பட்ட 10 கோடிக்கு மேற்பட்ட குழந்தைகள் எடை குறைவாகவே
உள்ளனர் என்றும், ஊட்டச்சத்துப் பற்றாக்குறையால் ஆண்டுதோறும் 25 இலட்சத்துக்கு மேற்பட்ட
சிறார் இறக்கின்றனர் என்றும் ஐ.நா. அறிக்கை கூறுகிறது.