அக். 09, 2012. உலகில் உள்ள எல்லா மதங்களிலுமே இறைவன் எல்லாம் வல்லவர் என்ற நம்பிக்கை
உள்ளது. யாராலும் செய்யமுடியாத காரியங்களை இறைவன் செய்யக்கூடிய வல்லமை படைத்தவர் என்று
சொல்லக்கூடிய அதே நேரத்தில் இறைவன் எல்லாம் வல்லவர் என்றால் உலகில் ஏன் தீமைகள் நிகழ்கின்றன
என்ற கேள்வியும் எழுகிறது. இன்றைய விவிலியத்தேடல் நிகழ்ச்சியில் இந்த இரு கருத்துகளையும்
சற்று ஆழமாகச் சிந்திப்போம். அன்பார்ந்தவர்களே! கடந்த இரு வாரங்களாக 139வது திருப்பாடலின்
முதல் 12 சொற்றொடர்களைச் சிந்தித்தோம். இறைவன் எல்லாம் அறிந்தவர் என்றும், எங்கும் இருக்கிறார்
என்றும் நமது சிந்தனைகளை ஆழப்படுத்தினோம். இன்று அதே பாடலின் எஞ்சிய சொற்றொடர்களைச் சிந்திப்போம்.
இதோ எஞ்சியிருக்கும் சொற்றொடர்களில் சில:
ஏனெனில், என் உள் உறுப்புகளை உண்டாக்கியவர்
நீரே! என் தாயின் கருவில் எனக்கு உருதந்தவர் நீரே! அஞ்சத்தகு, வியத்தகு முறையில் நீர்
என்னைப் படைத்ததால், நான் உமக்கு நன்றி நவில்கின்றேன்; உம் செயல்கள் வியக்கத்தக்கவை என்பதை
என் மனம் முற்றிலும் அறியும். என் எலும்பு உமக்கு மறைவானதன்று; மறைவான முறையில் நான்
உருவானதையும் பூவுலகின் ஆழ்பகுதிகளில் நான் உருப்பெற்றதையும் நீர் அறிந்திருந்தீர். உம்
கண்கள் கருமுளையில் என் உறுப்புகளைக் கண்டன; நீர் எனக்குக் குறித்து வைத்துள்ள நாள்கள்
எல்லாம் எனக்கு வாழ்நாள் எதுவுமே இல்லாத காலத்திலேயே உமது நூலில் எழுதப்பட்டுள்ளன. இறைவா!
உம்முடைய நினைவுகளை நான் அறிந்துகொள்வது எத்துணைக் கடினம்! அவற்றின் எண்ணிக்கை எத்துணைப்
பெரிது!
இறைவன் எல்லாம் வல்லவர் என்று சொன்னவுடனேயே நமது நினைவுக்கு வருபவை எவை?
அறிவியலார்கள், மருத்துவர்கள் செய்யமுடியாத காரியங்கள் அதிசயவிதமாக நடந்தேறுகின்றன என்பவைதானே.
இத்தகைய அதிசயங்களையெல்லாம் செய்வது இறைவனே என்பது நம் நம்பிக்கை. எனவேதான் 1000 கேள்விகளுக்கு
அப்பாலும், இறைவன் எல்லாம் வல்லவர் என்ற கருத்து நம் மனதில் ஆழமாக உள்ளது. இந்த நமது
நம்பிக்கைக்கு விவிலியமும், மனிதகுல வரலாறும் நமக்கு துணைநிற்கின்றன. வயது முதிர்ந்த
காலத்தில் ஆபிரகாம் சாராள் தம்பதியருக்கு பிள்ளைச் செல்வத்தை இறைவன் கொடுத்தார் என தொடக்க
நூல் பிரிவு 17 சொல்கிறது. 17: 1, 16-17
ஆபிராமுக்கு வயது தொண்ணூற்றொன்பதாக இருந்தபொழுது,
ஆண்டவர் அவருக்குத் தோன்றி, 'நான் எல்லாம் வல்ல இறைவன். எனக்குப் பணிந்து நடந்து, மாசற்றவனாய்
இரு. அவளுக்கு ஆசி வழங்குவேன். அவள் வழியாக உனக்கு ஒரு மகனையும் தருவேன். அவளுக்கு
நான் ஆசி வழங்க, அவள் வழியாக நாடுகள் தோன்றும். மக்களினங்களுக்கு அரசர்களும் அவளிடமிருந்து
உதிப்பர்' 'என்றார். ஆபிரகாம் தாள்பணிந்து வணங்கி நகைத்து, 'நூறு வயதிலா எனக்குக்
குழந்தை பிறக்கும்? தொண்ணூறு வயது சாராவா குழந்தை பெறப் போகிறாள்?' என்று தமக்குள் சொல்லிக்
கொண்டார்.
ஆபிரகாமுக்குமே நம்பிக்கை இல்லை. ஆனால், இறைவனால் முடிந்தது. முதிர்ந்த
வயதிலும் சாராள் கருத்தாங்கி, ஒரு மகனைப் பெற்றெடுத்தாள். அவனுக்கு ஈசாக் என்று பெயரிட்டார்கள்.
இறைவன் எல்லாம் வல்லவர் என்பதற்கு இது ஒரு சான்று. புதிய ஏற்பாட்டிலே, லூக்கா நற்செய்தி
முதல் பிரிவிலே கபிரியேல் தூதர் மரியாவுக்கு அருள்நிறை வாழ்த்தை சொன்னபோது, இது எவ்வாறு
நிகழும் என்று கேட்டார். அதற்கு கபிரியேல் தூதர் அவரிடம், தூய ஆவி உம்மீது வரும்.
உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப் போகும் குழந்தை தூயது.
அக்குழந்தை இறைமகன் எனப்படும். உம் உறவினராகிய எலிசபெத்தும் தம் முதிர்ந்த வயதில்
ஒரு மகனைக் கருத்தரித்திருக்கிறார். கருவுற இயலாதவர் என்று சொல்லப்பட்ட அவருக்கு இது
ஆறாம் மாதம். ஏனெனில், கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை' என்றார். (லூக்கா 1: 35-37)
இயேசுவின்
நற்செய்தி அறிவிப்பின் ஒரு கட்டத்தில், ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது கூட எளிதானது,
ஆனால் செல்வர் விண்ணரசில் நுழைவது கடினம் என்று சொன்னார். இதைக்கேட்ட சீடர்கள், அப்போது
யார்தான் மீட்பு பெற முடியும்? என்று கேட்டபோது, மனிதரால் இயலாது. ஆனால், இறைவனால் எல்லாம்
இயலும் என்று சொன்னார். நீண்டகாலமாக அடிமைநிலையிலிருந்த இஸ்ரயேல் மக்கள், பாரவோனை
எதிர்ப்பதும், அவனிடமிருந்து தப்புவதும் எளிதானல்ல, பாலும், தேனும் பொழியும் கானான் நாட்டிற்கு
வந்து சேர்வது சாதாரண காரியமல்ல என்றெல்லாம் எண்ணி, ஒவ்வொரு முறையும் நம்பிக்கை இழந்தனர்.
இருப்பினும் இவையனைத்தும் நடந்தன. காரணம், எல்லாம் வல்ல இறைவன். உரோமைப் பேரரசின்
அடக்குமுறையும், யூத சமய பெரியோர்களின் அதிகாரமும் கோலோச்சிய காலத்திலும், இயேசு விதைத்த
இறையாட்சி விதையை, இம்மண்ணில் வளர்த்தெடுத்து, மாபெரும் மரமாக திருத்தூதர்கள் உருவாக்கியிருக்கிறார்கள்
என்றால், அதற்கு காரணம் எல்லாம் வல்ல இறைவனே. இறைவன் எல்லாம் வல்லவர் என்று சொல்வதற்கு
இதைப் போன்று எண்ணற்ற பகுதிகளை விவிலியத்திலிருந்து அடிக்கோடிட்டு காட்டமுடியும். விவிலியம்
மட்டுமல்ல, ஒட்டமொத்த மனிதகுல வரலாறுமே இறைவன் எல்லாம் வல்லவர் என்பதை ஆணித்தரமாக பதிவு
செய்துள்ளது.
புகழ்பெற்ற மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோயாளிகள் குணம்பெற்றதை
நாம் கேள்விப்பட்டிருப்போம், படித்திருப்போம், உடன் இருந்து அறிந்திருப்போம், ஏன் நமக்கே
கூட நிகழ்ந்திருக்கக் கூடும். லூர்து, பாத்திமா, வேளாங்கண்ணி போன்ற திருத்தலங்களில் மட்டுமல்ல.
நமது அன்றாட வாழ்வில் நம்மைச் சுற்றி நடக்கும் புதுமைகள் அனைத்தும் இறைவன் எல்லாம் வல்லவர்
என்பதையே நினைவுபடுத்துகின்றன. பல்வேறு இடங்களில், வேறுபட்ட சூழல்களில் நூற்றுக்கணக்கான
உயிர்கள் மயிரிழையில் சிறு காயம் கூட இல்லாமல் விபத்திலிருந்து தப்பியதும், விபத்தில்
மாட்டிக்கொண்டாலும் அதிசயவிதமாக உயிர் பிழைத்ததும் இறைவன் எல்லாம் வல்லவர் என்பதற்குச்
சான்றுகள்.
எல்லாவிதமான சமாதானப் பேச்சுவார்த்தைகளும் தோல்வியடைந்து, இனி சேரவே
மாட்டார்கள் என்ற நிலையிலிருந்த தம்பதியினர், உறவினர்கள் சேர்ந்ததும், இனி, இவர் மனம்
திருந்தவே மாட்டார். இவரின் கல்லான இதயத்தை மாற்றக்கூடிய சக்தி இவ்வுலகிலே இல்லை என்று
சொல்லக்கூடிய நிலையில் இருந்தவர் முற்றிலும் மனம் மாறுவதும் இறைவன் எல்லாம் வல்லவர் என்பதற்கான
சான்றுகள் அல்லவா? இது போன்று சிந்திக்க ஆரம்பித்தால் உண்மை நிகழ்வுகளும், அதனால் பயன்பெற்ற
சாட்சிகளும் நமது சிந்தனைகளை நிரப்பும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
அன்பார்ந்தவர்களே!
இப்போது நம் நிகழ்ச்சியின் இரண்டாவது கேள்விக்கு கடந்து செல்வோம். இறைவன் எல்லாம் வல்லவர்
என்றால் உலகில் ஏன் தீயன நடக்கின்றன? எல்லாம் வல்லவரால் இவற்றை தடுத்து நிறுத்தமுடியவில்லையா?
இல்லை இவையெல்லாமே அவரது மேற்பார்வையில்தான் நடைபெறுகின்றனவா? இல்லை அவரை மீறி நடக்கின்றனவா?
என்ற கேள்விகள் எழுப்பப்படுகின்றன. நாளிதழ்கள் நமக்குச் சொல்வதெல்லாம் கொலை, கொள்ளை,
ஏமாற்று, வழிப்பறி என்ற மனித நேயத்திற்கு நேர்மாறான செயல்கள்தான். இறைவன் எல்லாம் வல்லவர்
என்றால் ஏன் இவையெல்லாம் நிகழ்கின்றன என்ற கேள்விகள் எல்லார் மனதிலும் எழாமல் இல்லை.
இக்கேள்விகளுக்கு யாராலும் பதில் சொல்ல முடியவில்லை. நன்கு படித்த மேதைகளும், நிறைந்த
அனுபவசாலிகளும் பல்வேறு அறிவுப்பூர்வமான விளக்கங்களையும் தந்திருக்கிறார்கள், தந்துகொண்டேயிருக்கிறார்கள்.
இறைவன் இத்தீமைகளை அனுமதித்திருப்பதற்கான காரணமென இவற்றைச் சொல்கிறார்கள்: சாவி கொடுத்தால்
இயங்கும் பொம்மைகளைப் போல இறைவன் மனிதர்களை வைத்திருக்க விரும்பவில்லை. நல்லது, கெட்டதை
அறிந்து அவற்றில் நல்லதை தேர்ந்துதெளியும் சிறந்த உயிர்களாக மண்ணில் வாழுமாறு அவர்களுக்குச்
சுதந்திரத்தைக் கொடுத்திருக்கிறார். அதோடு மனிதர்கள், தீமைகளின் மத்தியிலும் சிறந்த குணங்களில்,
புண்ணியங்களில் வளரவேண்டும் என்பதற்காகவுமே தீமைகளை முற்றிலுமாக அழிக்காமல் விட்டு வைத்திருக்கிறார்
என்றும் சொல்கிறார்கள். இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக யோபுவின் வாழ்க்கையைக் கோடிட்டுக்காட்டுகின்றனர்.
தீயவனின் கொடுமைகளால் இறைவனை மறுதலிக்கவோ, அல்லது, என்ன நடந்தாலும் இறைவனைப் பற்றிக்
கொண்டிருக்கவோ யோபுவிற்கு வாய்ப்புகள் இருந்தன. யோபு நல்லதைத் தேர்ந்து கொண்டார். இறைபுண்ணியங்களில்
வளர்ந்தார்.
இது போன்ற எண்ணற்ற கேள்விகள் இருக்கின்றன. கேட்பவர் திருப்தி அடையும்
வகையில் எல்லாக் கேள்விகளுக்கும் சிறந்த முறையில் பதிலளிக்க யாராலும் முடியாது. ஏனெனில்,
நாம் குறையுள்ளவர்கள். எல்லாம் கடந்த கடவுளை நாம் புரிந்து கொள்ள முடியுமானால் அவர் கடவுளல்ல.
ஒரு பிள்ளையின் வாழ்வில், அதன் அப்பா செய்யக்கூடிய காரியங்கள் எண்ணற்றவை, மகத்தானவை.
என்னுடைய அப்பா இதையெல்லாம் செய்தார் என பிள்ளை பட்டியல் இட்டுச் சொல்லும். இவற்றையெல்லாம்
ஏன் செய்தார் என்று கேள்வி எழுப்பாது. கேள்வி எழுப்புவதைக் காட்டிலும் தன் அப்பா செய்த
காரியங்களை நினைத்துப் பூரிப்படையும். மகிழ்ச்சியில் திளைத்துப் போகும். வானகத் தந்தையின்
பிள்ளைகளாக நாமும் நம் தனிப்பட்ட வாழ்வில் எல்லாம் வல்ல இறைவன் செய்த வல்ல காரியங்களை
நினைத்துப் பார்ப்போம், மகிழ்ந்திருப்போம், அவரது மகிமையைப் பாருலகம் உணரச் செய்வோம்.