அரபு மொழியிலும் திருத்தந்தையின் புதன்பொது மறைபோதகம்
அக்.09,12. அக்டோபர் 10ம் தேதி இடம்பெறும் புதன் பொது மறைபோதகத்தில் அரபு மொழியிலும்
திருத்தந்தையின் உரை வழங்கப்படும் என்று திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்தந்தை
பெதரிக்கோ லொம்பார்தி இச்செவ்வாயன்று அறிவித்தார். திருத்தந்தை தனது புதன் பொது மறைபோதக
உரைகளைப் பல்வேறு மொழிகளில் நிகழ்த்தி வருகிறார். இப்புதன்கிழமையிலிருந்து ஒவ்வொரு புதன்
பொது மறைபோதகத்திலும் அவரது உரை அரபு மொழியிலும் இடம்பெறும் என அறிவித்தார் அருள்தந்தை
லொம்பார்தி. திருத்தந்தையின் புதன் பொது மறைபோதக உரையையும் வாழ்த்தையும் ஒருவர் அரபு
மொழியில் வாசிப்பார் என்றும், அண்மையில் திருத்தந்தை லெபனனுக்கு மேற்கொண்ட திருப்பயணத்தின்
தொடர்ச்சியாக இது அமைந்துள்ளது என்றும் அருள்தந்தை லொம்பார்தி கூறினார். மத்திய கிழக்குப்
பகுதியின் கிறிஸ்தவர்களுக்குத் தனது தொடர்ந்த ஆதரவை அளிக்கும் நோக்கத்திலும், அப்பகுதியின்
அமைதிக்குத் தொடர்ந்து உழைக்கவும் அதற்காகச் செபிக்கவும் அனைவருக்கும் இருக்கும் கடமையை
நினைவுபடுத்தவும் இப்புதிய முயற்சியைத் திருத்தந்தை தொடங்கவுள்ளார் எனவும் அருள்தந்தை
லொம்பார்தி மேலும் கூறினார்.