பிலிப்பைன்ஸில் 40 ஆண்டுகால உள்நாட்டுப் போர் முடிவுக்கு வர வாய்ப்பு
அக். 10, 2012. பிலிப்பீன்ஸ் நாட்டின் இசுலாமிய போராளிக்குழு அமைதி உடன்படிக்கைக்கு இசைவு
தெரிவித்துள்ளதன் மூலம் அந்நாட்டில் தொடர்ந்து வந்த 40 ஆண்டுகால உள்நாட்டுப் போர் முடிவுக்கு
வரும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. பிலிப்பீன்ஸில் தனியாட்சி கோரி போராடி வந்த இசுலாமிய
சுதந்திர முன்னணி (MILF) எனப்படும் இப்புரட்சிக்குழுவின் விண்ணப்பத்தை ஏற்று, புதிய
சுயாட்சிப் பகுதி ஒன்றை பிலிப்பீன்ஸின் தெற்கு பகுதியில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக
வாழும் இடத்தில் அமைத்துக்கொடுப்பதற்கு அரசுத் தலைவர் பெனினோ அகுயினோ இசைவு தெரிவித்ததையடுத்து
இந்த அமைதி உடன்படிக்கை எட்டப்படவுள்ளது. இந்த உடன்படிக்கைக்கான ஒப்பந்தம் அடுத்த
வாரம் தலைநகர் மணிலாவில் கையெழுத்திடப்படவுள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை
இராணுவத்திற்கும், இப்புரட்சிக்குழுவுக்கும் இடையில் நடைபெற்று வந்த மோதலில் சுமார் 1,20,000
பேர் கொல்லப்பட்டுள்ளனர்.