2012-10-08 16:52:46

திருத்தந்தை : நற்செய்தியை அறிவிப்பதற்கு கடவுளின் அக்கினியை உள்ளத்தில் கொண்டிருந்து அதை உலகில் துணிச்சலுடன் ஏற்றி வைக்க வேண்டும்


அக்.08,2012. கடவுள் திருஅவையில் செயலாற்றுகிறார் என்பதை நற்செய்தி அறிவிப்பாளர்கள் தங்கள் இதயத்தில் அறிந்திருக்க வேண்டும், கிறிஸ்துவை உலகுக்கு அறிவிப்பதற்குப் பற்றிஎரியும் ஆவலைக் கொண்டிருக்க வேண்டும் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இத்திங்களன்று கூறினார்.
இத்திங்களன்று வத்திக்கான் ஆயர்கள் மாமன்ற அறையில் திருத்தந்தையின் தலைமையில் 13வது உலக ஆயர்கள் மாமன்றத்தின் முதல் அமர்வு திருப்புகழ்மாலை செபத்துடன் தொடங்கியது. இச்செபத்தில் தனது சிந்தனைகளைப் பகிர்ந்து கொண்ட திருத்தந்தை, நற்செய்தியை அறிவிப்பதற்கு கடவுளின் அக்கினியை உள்ளத்தில் கொண்டிருந்து அதை உலகில் துணிச்சலுடன் ஏற்றி வைக்க வேண்டும் என்று கூறினார்.
இரண்டாயிரம் ஆண்டுகள் நற்செய்தியை அறிவித்த பின்னர் கடவுள் யார், அவர் மனித சமுதாயத்தோடு என்ன செய்கிறார் என்ற பெரிய கேள்வி எப்போதும் பலரின் இதயங்களில் இருக்கின்றன என்றுரைத்த திருத்தந்தை, கடவுள் நமக்காக என்ன செய்துள்ளார் என்பதை திருஅவை அறியச் செய்ய முடியும், திருஅவை கடவுள் பற்றிப் பேச முடியும் என்று கூறினார்.
கடவுள்மட்டுமே தமது திருஅவையை உருவாக்க முடியும், கடவுள் செயல்படவில்லையெனில் நமது காரியங்கள் நமது காரியங்களாக மட்டுமே இருக்கும், கடவுள் பேசினார், அவர் பேசுகிறார், அவர் நம்மை அறிந்திருக்கிறார், அவர் நம்மை அன்பு செய்கிறார் என்பதற்குத் திருஅவை சான்று பகர முடியும் என்றும் திருத்தந்தை கூறினார்.
நற்செய்தி என்பது கடவுள் தமது மௌனத்தைக் கலைத்துள்ளார் என்று அர்த்தமாகும் என்றும் கூறினார் அவர்.
இந்த உலக ஆயர்கள் மாமன்றம் ஒவ்வொரு நாளும் செபத்தோடு தொடங்குகிறது என்றால் எந்த முயற்சியும் எப்போதும் கடவுளின் செயலாக இருக்கின்றது, எனவே நாம் கடவுளோடு ஒத்துழைக்க வேண்டும் என்றும் திருத்தந்தை கூறினார்.
இந்த 13வது உலக ஆயர்கள் மாமன்றத்தில் சென்னை-மயிலைப் பேராயர் சின்னப்பா உட்பட 262 மாமன்றத் தந்தையர்கள் கலந்து கொள்கின்றனர். வல்லுனர்கள், பார்வையாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் என மொத்தம் 408 பிரதிநிதிகள் இதில் கலந்து கொள்கின்றனர்.







All the contents on this site are copyrighted ©.