அக்.06,2012. உலகில் 2015ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் ஆரம்பக்கல்வி வழங்கும் திட்டத்தை
நிறைவேற்றுவதற்கு ஏறக்குறைய 17 இலட்சம் ஆசிரியர்கள் தேவைப்படுகிறார்கள் என்று பல்வேறு
ஐ.நா. நிறுவனங்களின் தலைவர்கள் கூறினர். உலக ஆசிரியர்கள் தினமான அக்டோபர் 5ம் தேதி,
இவ்வெள்ளிக்கிழமையன்று இவ்வாறு உரைத்த ஐ.நா. நிறுவனங்களின் தலைவர்கள், ஆசிரியர்களுக்குச்
சாதகமான சூழல்களும் போதுமான ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளும் உருவாக்கப்படவும், அவர்களின்
உரிமைகள் பாதுகாக்கப்படவும் கேட்டுள்ளனர். ஆசிரியர்களுக்குப் பாதுகாப்பு வழங்குவது
குறித்த 1966ம் ஆண்டின் உடன்பாட்டில் யுனெஸ்கோவும், ஐ.நாவின் உலக தொழில் நிறுவனமும் கையெழுத்திட்டதை
நினைவுகூரும் விதமாக 1994ம் ஆண்டிலிருந்து உலக ஆசிரியர்கள் தினம் கடைப்பிடிக்கப்பட்டு
வருகிறது.