சிரியாவுக்கு ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்துங்கள் என பேராயர் வேண்டுகோள்
அக்.04, 2012. சிரியாவில் மோதலில் ஈடுபட்டுவரும் இருதரப்பினருக்கும் எவ்வித ஆயுத உதவிகளும்
வழங்கக்கூடாது என மேற்கத்திய நாடுகளுக்கு விண்ணப்பம் ஒன்றை விடுத்துள்ளார் கிரேக்க ஆர்த்தடாக்ஸ்
பேராயர் George Tauma Abu Zakhem. பல ஆயிரக்கணக்கான மக்களைக் கொல்வதுடன் மட்டும் அல்லாமல்,
பாரம்பரியமும் கலாச்சாரமும் நிரம்பிய அழகான ஒரு நாட்டை, போரிடும் துருப்புகள் அழிவுக்குள்ளாக்கி
வருகின்றன என்ற கவலையை வெளியிட்ட பேராயர், சிரியா நாட்டிற்குள் ஆயுதங்களை அனுப்புவதை
ஐரோப்பிய நாடுகளும் உலக சமுதாயமும் நிறுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார். அறிவற்ற
இந்த அழிவு நிலைகளைத் தடுக்க உலகம் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் இருப்பது குறித்த
தன் ஆழ்ந்த கவலையையும் வெளியிட்டார் கிரேக்க ஆர்த்தடாக்ஸ் பேராயர் Abu Zakhem.