செப்.29,2012. வருகிற அக்டோபர் 7ம் தேதி ஞாயிறன்று வத்திக்கான் பசிலிக்காவில் திருப்பலி
நிகழ்த்தி 13வது உலக ஆயர்கள் மாமன்றத்தை ஆரம்பித்து வைக்கவுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
உலக மாமன்றத் தந்தையரோடும் இஸ்பானிய மற்றும் ஜெர்மன் ஆயர்களோடும் நிகழ்த்தும் கூட்டுத்திருப்பலியில்
புனித அவிலா ஜான், புனித பின்ஜென் கில்டெகார்டு ஆகிய இருவரையும் திருஅவையின் மறைவல்லுனர்கள்
என அறிவிக்கவுள்ளார் திருத்தந்தை. 16ம் நூற்றாண்டு இஸ்பானிய அருள்பணியாளரான புனித
அவிலா ஜான், தனது தாயகத்தில் அருள்பணியாளர்களின் வாழ்வில் சீர்திருத்தத்தைக் கொண்டுவந்தவர்
மற்றும் மறையுரைகள் ஆற்றுவதில் தேர்ச்சி பெற்றவர். 12ம் நூற்றாண்டு ஜெர்மன் தியான
யோகியான புனித பின்ஜென் கில்டெகார்டு, புனித பெனடிக்ட் துறவு சபையைச் சார்ந்தவர். இவரது
இறைக்காட்சிகளும் இறையுண்மைகள் குறித்த கடிதங்களும் நூல்களும் புகழ்பெற்றவை.