2012-09-29 15:43:19

இதய நோயால் இறக்கும் பெண்களின் எண்ணிக்கை ஆண்களைவிட அதிகம்


செப்.29,2012. உலகில் கடந்த முப்பது ஆண்டுகளில் இதய நோயால் இறந்துள்ள பெண்களின் எண்ணிக்கை ஆண்களைவிட அதிகம் எனவும், மாரடைப்பு ஏற்பட்ட சில வாரங்களுக்குள்ளே ஆண்களைவிட பெண்களே அதிகம் இறக்கின்றனர் எனவும் மும்பை இதய நோய் நிபுணர் மருத்துவர் பவன் குமார் கூறினார்.
செப்.29, இச்சனிக்கிழமையன்று உலக இதயம் தினம் கடைப்பிடிக்கப்பட்டதையடுத்து இவ்வாறு தெரிவித்த பவன் குமார், இந்தியாவில் மாரடைப்பால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாகவும், நாட்டில் இடம்பெறும் பெண்களின் இறப்புக்களில் 17 விழுக்காட்டுக்கு மாரடைப்பு காரணம் எனவும் கூறினார்.
மேலும், உலகில் ஏற்படும் உயிரிழப்புகளில், இதய நோயால் ஏற்படும் இறப்புகள்தான் அதிகம் என்றும், ஆண்டுதோறும் ஒரு கோடியே 73 இலட்சம் பேர் இறக்கின்றனர் என்றும், இதய நோய்களில் 80 விழுக்காட்டு மாரடைப்புகள் தடுக்கப்படக் கூடியவை என்றும் உலக நலவாழ்வு நிறுவனம் கூறியுள்ளது.
மலேரியா, எச்.ஐ.வி., டி.பி., ஆகியவற்றால் ஓராண்டில் 38 இலட்சம் பேர் மட்டுமே இறக்கின்றனர் என்றுரைக்கும் உலக நலவாழ்வு நிறுவனம், உலகில் ஆண்டுக்கு பத்து இலட்சம் குழந்தைகள், பிறக்கும் போதே இதயக் குறைபாட்டுடன் பிறக்கின்றன எனத் தெரிவிக்கின்றது.
முறையற்ற உணவுப் பழக்கவழக்கம், அதிக நேரப்பணி, உடற்பயிற்சியின்மை, மனஉளைச்சல் போன்றவை இதய நோய்க்கான சாத்தியக் கூறுகளாகும்.







All the contents on this site are copyrighted ©.