திருத்தந்தை : புனித Gallenனின் நினைவு ஐரோப்பாவில் நற்செய்தி அறிவிப்பின் அவசரத் தேவையைச்
சிந்திக்க அழைக்கின்றது
செப்.28,2012. புனித Gallenனின் நினைவு ஐரோப்பாவில் நற்செய்தி அறிவிக்கப்பட வேண்டியதன்
அவசரத் தேவையைச் சிந்தித்துப் பார்ப்பதற்கு அழைக்கின்றது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட்
கூறினார். நற்செய்தி அறிவிப்பைப் புதிய பாணியில் செய்வது குறித்த அனைத்துலக ஆயர் மாமன்றம்
தொடங்கவிருக்கும் வேளையில், புனித Gallenனின் நினைவும் அவரது பணியும், ஐரோப்பாவில் விசுவாசத்துடனும்
நம்பிக்கையுடனும் நற்செய்தி அறிவிப்பதற்கு அழைக்கின்றன என்றும் கூறினார் திருத்தந்தை. CCEE
என்ற ஐரோப்பிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பு, சுவிட்சர்லாந்து நாட்டு Sankt Gallenல் நடத்திவரும்
கூட்டத்திற்குத் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சிசியோ பெர்த்தோனே வழியாகக் செய்தி
அனுப்பிய திருத்தந்தை, ஐரோப்பாவில் நற்செய்தி அறிவிக்கப்பட வேண்டியதன் அவசரத் தேவையை
அக்கண்டத்தின் கிறிஸ்தவர்கள் அனைவரும் சிந்தித்துப் பார்க்குமாறு கேட்டுள்ளார். 1978ம்
ஆண்டிலிருந்து CCEE அமைப்புச் செயலரின் இடமாக இருந்து வரும் Sankt Gallenக்கு, புனித
Gallen வந்ததன் 1,400ம் ஆண்டு நினைவாக இவ்வாண்டின் CCEE அமைப்பின் கூட்டம் Sankt Gallenல்
நடைபெற்று வருகிறது.