இலங்கை மீது அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் செலுத்தவேண்டும்
செப்.28,2012. இலங்கையில் இராணுவத்துக்கும் விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் இடையில் நடந்த
இறுதிப் போரின்போது நடந்ததாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் போன்றவற்றுக்கு உரியவர்களைப்
பொறுப்பாக்குவது மற்றும் போருக்குப்பிறகு நல்லிணக்கத்தை உருவாக்குவது ஆகியவை தொடர்பில்
இலங்கை அரசு மீது அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் செலுத்தவேண்டும் என்று அமெரிக்க நாடாளுமன்ற
உறுப்பினர்களின் குழு ஒன்று கோரிக்கை விடுத்திருக்கிறது. அமெரிக்க வெளியுறவுத்துறை
செயலாளர் ஹில்லாரி கிளிண்டனுக்கு 31 அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு
அனுப்பியுள்ள மனுவில் இவ்வாறு கேட்கப்பட்டுள்ளது. இலங்கையின் போர்க்குற்றங்களுக்கு
உரியவர்களைப் பொறுப்பாக்குவதிலும், போர் முடிந்து மூன்று ஆண்டுகள் நிறைவடைந்த பிறகும்
அங்கே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதிலும் இலங்கை அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்கவில்லை;
மாறாக காலம் கடத்துவதற்கான காரணங்களை மட்டுமே அது தேடிக்கொண்டிருக்கிறது; எனவே, அமெரிக்கா
தொடர்ந்து இலங்கை மீது அழுத்தம் செலுத்தவேண்டும் என்று அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.