செப் 26, 2012. இத்தாலியில் கோடைகாலத்திற்கும் குளிர் காலத்திற்கும் இடைப்பட்ட ஒரு
காலநிலை நிலவி வரும் சூழலில், திருத்தந்தையின் இவ்வாரப் புதன் பொது மறைபோதகம் வத்திக்கான்
தூய பேதுரு பேராலய வளாகத்தில் இடம்பெற்றது. காஸ்தல் கந்தோல்ஃபோ கோடை விடுமுறை இல்லத்திலிருந்து
வத்திக்கான் நகர் வந்த திருத்தந்தை, இவ்வாரமும் செபம் குறித்த தன் சிந்தனைகளைத் தொடர்ந்தார்.
கடந்த சில வாரங்களாக புதன் மறைபோதகங்களில், செபம் குறித்து திருவிவிலியத்தில் கூறப்பட்டுள்ளவைகள்
குறித்து ஆழமாகச் சிந்தித்து வரும் நாம், இன்று செபத்தின் பிறிதொரு விலைமதிப்பற்ற ஆதாரமாகிய
திருவழிபாடு குறித்து நம் பார்வையைத் திருப்புவோம் எனத் துவக்கினார். திருவழிபாடு
என்ற கிரேக்கச் சொல், ' மக்களுக்காக மக்களால் ஆற்றப்பட்ட பணி ' என்ற அர்த்தத்தைக் கொண்டுள்ளது.
இங்கு 'மக்கள்' என்பது இறைவனின் புதிய மனிதக் குலத்தைக் குறிக்கின்றது. இந்தப் புதிய
மனுக்குலம் இயேசுகிறிஸ்துவால் கொண்டுவரப்பட்டது. இந்த மனுக்குலம் தன்னிலையிலேயே உருவானதோ,
இரத்த சம்பந்தம் மூலமானதோ, நாடு மற்றும் நில எல்லைகளால் கட்டுப்பட்டதோ அல்ல, மாறாக, இயேசுவின்
பாஸ்கா மறையுண்மையால் கொணரப்பட்டது. திருவழிபாடு என்பது 'இறைவனின் செயல்'. இரண்டாம் வத்திக்கான்
பொதுச்சங்கம் உரைப்பதுபோல், நம் மீட்பரும் தலைமைக்குருவுமான இயேசுகிறிஸ்து, திருவழிபாட்டின்
துணைகொண்டு, தன் மீட்புப்பணியை திருஅவைக்குள் இருந்துகொண்டு திருஅவையோடு, திருஅவை வழியாகத்
தொடர்ந்து ஆற்றுகிறார். கடவுள் செயலாற்றுகிறார், நாமும் அச்செயல்பாட்டில் இணைகிறோம்,
பலன்பெறுகிறோம். இதுவே, திருவழிபாட்டின் மிக உன்னத வியத்தகு நிகழ்வு. இறைவனே அனைத்திற்கும்
முதன்மையானவர் என்பதை திருவழிபாடு நமக்கு நினைவூட்டுகிறது. அதற்கியைந்தாற்போல் இரண்டாம்
வத்திக்கான் பொதுச்சங்கமும் தன் பணிகளை, திருவழிபாடு குறித்த கலந்துரையாடலுடனேயே துவக்கியது.
திருவழிபாட்டின் அடிப்படைத் தத்துவம் என்னவெனில், தந்தையாம் இறைவனை நோக்கிய தொடர்பிணைவேயாகும்.
தந்தையின் மீட்பு அன்பானது, அவர் மகனின் மரணம் மற்றும் உயிர்ப்பில் தன் உச்ச நிலையை அடைகிறது.
திருவழிபாட்டிலேயே நாம் நம் இதயங்களை மேல்நோக்கி எழுப்புகிறோம். திருவழிபாட்டில் நம்முள்
எழும்பும் செபத்தில் நாம் நம் சகோதரர்களுடன் ஒன்றிணைந்து கூடி, இறைவார்த்தைக்கு நம்மைத்
திறந்தவர்களாக்குகிறோம். இச்செபமானது இறைமகன் வழி, தூய ஆவியில் இறைத்தந்தையை நோக்கியதாக
உள்ளது. இவ்வாறு, தன் மறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை, இந்தியா, இலங்கை,இந்தோனேசியா,
வியட்நாம்,பிலிப்பீன்ஸ் உட்பட பல்வேறு நாடுகளிலிருந்தும் வந்திருந்த திருப்பயணிகளை வாழ்த்தி,
அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.