சிரியாவில் சிறார் எதிர்கொள்ளும் கொடுமைகள் திகைக்க வைக்கின்றன, பிரிட்டன் பிறரன்பு நிறுவனம்
செப்.25,2012. கடும் சண்டை இடம்பெற்றுவரும் சிரியாவில் திகைக்க வைக்கும் சித்ரவதைகள்,
கைதுகள், கடத்தல்கள் போன்றவற்றைச் சிறார் எதிர்கொள்கின்றனர் என்றும் இந்தக் கொடுமைகள்
பதிவு செய்யப்பட வேண்டியது நல்லது என்றும் Save the Children என்ற பிரிட்டன் பிறரன்பு
நிறுவனம் கூறுகிறது. சிரியாவின் அகதிச் சிறாரிடமிருந்து கேட்டறிந்த தகவல்களை வைத்து
இவ்வாறு கூறுவதாகத் தெரிவித்த Save the Children நிறுவனம், சிறார் வாழும் இடங்களில் ஐ.நா.வின்
இருப்பு அதிகம் தேவை என்றும் வலியுறுத்துகிறது. இத்திங்களன்று தொடங்கப்பட்டுள்ள ஐ.நா.
பொது அவைக் கூட்டத்தில் சிரியா நாட்டுச் சிறார் குறித்து கவனம் செலுத்தப்படுமாறும் கேட்டுள்ளது
Save the Children நிறுவனம். ஏறக்குறைய ஒவ்வொரு குழந்தையும் தனது குடும்பத்தில் ஒருவர்
கொல்லப்பட்டதைப் பார்த்திருக்கின்றது என்றுரைக்கும் அந்நிறுவனம், சிரியாவில் கடந்த 18
மாதங்களாக இடம்பெற்றுவரும் சண்டைகள் குறித்த ஆவணங்களைத் தயாரித்திருப்பதாகவும் தெரிவித்தது.