இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில், பெண்களில் மூன்றில் ஒருவர் புகையிலைப் பொருட்களுக்கு
அடிமை
செப்.24,2012. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து மற்றும் மிசோரமில், ஆண்களில்,
இரண்டுக்கு ஒருவரும், பெண்களில், மூன்றுக்கு ஒருவரும், புகையிலைப் பொருட்களுக்கு அடிமையாக
உள்ளனர் என நலவாழ்வுத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். வடகிழக்கு மாநிலங்களில் சிகரெட்
மற்றும் புகையிலைப் பொருட்கள் பயன்படுத்துவோர் எண்ணிக்கை, பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில்,
மிக அதிகமாக உள்ளது, புகையிலைப் பழக்கத்தால், நாகாலாந்து, மிசோரம் மாநிலங்களைச் சேர்ந்த
பல்லாயிரக்கணக்கான இளைஞர்களும், நடுத்தர வயதினரும், வாழ்க்கையைச் சீரழித்துக் கொண்டுள்ளனர்
எனவும் கவலையை வெளியிட்டனர் இந்த அதிகாரிகள். மிசோரம் மக்களில் புகையிலைப் பயன்படுத்துவோர்
எண்ணிக்கை 67 விழுக்காடு எனவும், நாகாலாந்தில், இது 57 விழுக்காடு எனவும் கூறும் அதிகாரிகள்,
புகையிலைத் தொடர்பான நோய்கள் அதிகம் பாதித்த மக்களைக் கொண்ட மாநிலமாக நாகாலாந்து உள்ளது
என மேலும் தெரிவித்தனர்.