2012-09-21 15:21:39

திருத்தந்தை : மனித வாழ்வைப் பாதுகாப்பதில் இறைவாக்கினர்களாகச் செயல்பட ப்ரெஞ்ச் ஆயர்களுக்கு அழைப்பு


செப்.21,2012. மனித வாழ்வு மற்றும் திருமணத்தின் உண்மையான இயல்பைத் திரித்துக் கூறுவதற்கு எடுக்கப்படும் ஒவ்வொரு முயற்சியிலிருந்தும் அவற்றைப் பாதுகாப்பதற்குத் திருஅவை அழைக்கப்பட்டுள்ளது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
ஆயர்கள் ஐந்தாண்டுக்கு ஒருமுறை திருத்தந்தையைச் சந்திக்கும் அட் லிமினாவை முன்னிட்டு இவ்வெள்ளிக்கிழமையன்று 32 ப்ரெஞ்ச் ஆயர்களைக் காஸ்தெல் கந்தோல்ஃபோவில் சந்தித்த திருத்தந்தை, திருஅவையின் வாழ்வில் பொதுநிலையினரின் பங்கு குறித்துப் பேசினார்.
அத்துடன் மறைமாவட்டப் பணிகள் அதன் தலைவரையே அதிகம் மையம் கொண்டிருப்பது குறித்தும் திருத்தந்தை குறிப்பிட்டார்.
மனித இயல்பு குறித்த தவறான கருத்துக்களால் இன்று குடும்ப வாழ்வு அச்சுறுத்தப்பட்டுள்ளது எனவும், சமுதாயத்தில் மனித வாழ்வையும் திருமணத்தையும் பாதுகாப்பது பிற்போக்கு மனப்பான்மை அல்ல, மாறாக அது ஓர் இறைவாக்குப்பணி எனவும் கூறினார் திருத்தந்தை.
கடவுளின் உருவிலும் சாயலிலும் படைக்கப்பட்ட மனிதரின் முழு வளர்ச்சியையும் அனுமதிக்கும் விழுமியங்களை ஊக்கப்படுத்துமாறும் ப்ரெஞ்ச் ஆயர்களைக் கேட்டுக் கொண்டார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.








All the contents on this site are copyrighted ©.