2012-09-19 15:55:37

திருத்தந்தையின் ஆறுதல் வார்த்தைகள் அலெப்போ கிறிஸ்தவர்களைச் சென்றடைந்தன


செப்.19,2012. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் லெபனன் நாட்டில் மேற்கொண்ட திருப்பயணம் அலெப்போ நகரக் கிறிஸ்தவர்களுக்கு ஆறுதலைக் கொடுத்தது என்று அலெப்போ கல்தேயரீதி ஆயரும் சிரியா நாட்டுக் காரித்தாஸ் நிறுவனத் தலைவருமான இயேசு சபை ஆயர் Antoine Audo கூறினார்.
சிரியாவில் இராணுவத்துக்கும் புரட்சியாளர்களுக்கும் இடையே நடைபெறும் கடும் சண்டைக்கு மத்தியில் இரண்டு மாதங்களாகச் சிக்கியிருந்த அலெப்போ கிறிஸ்தவர்களுக்குத் திருத்தந்தையின் வார்த்தைகள் ஆறுதல் அளித்தன என்று பிதெஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார் ஆயர் Audo.
சிரியாவிலிருந்து மத்திய கிழக்குப் பகுதிக்குப் புறப்படுவதற்கு முன்னர் திருத்தந்தைக்குச் செய்தி அனுப்பியதாகவும் கூறிய ஆயர், திருத்தந்தையின் லெபனன் திருப்பயணத்தில் அவரது வார்த்தைகள் எளிமையாகவும் தெளிவாகவும் இருந்தன என்றும் தெரிவித்தார்.
முஸ்லீம்கள்மீது மிகுந்த அன்புகொண்டு அவர் பேசினார் மற்றும் இந்த வெற்றிகரமானத் திருப்பயணத்துக்கு அவர்களுக்கு நன்றியும் தெரிவித்தார் என்றும் அலெப்போ ஆயர் Audo கூறினார்.
இதற்கிடையே, சிரியாவின் தலைநகர் தமாஸ்கஸ் மற்றும் அலெப்போ நகரங்களில் தாக்குதல்கள் கடுமையாக இடம்பெற்று வருகின்றன என்று இப்புதன் செய்திகள் கூறுகின்றன.







All the contents on this site are copyrighted ©.