மத்திய கிழக்கில் ஒப்புரவு ஏற்படுவதற்கு கிறிஸ்தவ சபைகளிடையே ஒன்றிப்பு அவசியம்
செப்.17,2012. மத்திய கிழக்கில் ஒப்புரவு ஏற்படுவதற்கு கிறிஸ்தவ சபைகளிடையே ஒன்றிப்பு
அவசியம் என்பதை இஞ்ஞாயிறு மாலை Charfet சிரியன் கத்தோலிக்க நமதன்னை ஆலயத்தில் தான் சந்தித்த
கிறிஸ்தவ சபைகளின் பிரதிநிதிகளிடம் கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். மத்திய
கிழக்குப் பகுதியில் வன்முறையும் நிலையற்றதன்மையும் காணப்படும் இந்நாள்களில், கிறிஸ்துவின்
சீடர்கள் மத்தியில் நிலவும் ஒன்றிப்பு ஒரு நல்ல உறுதியான சாட்சியமாக இருக்கவேண்டியது
இன்றியமையாதது என்று உரைத்த திருத்தந்தை, இவ்வாறு வாழும்போது உலகமும் இவர்களின் அன்பு,
அமைதி மற்றும் ஒப்புரவுச் செய்தியில் நம்பிக்கை வைக்கும் என்று கூறினார். கிறிஸ்துவின்
மீதான நமது அன்பு மெது மெதுவாக நம் மத்தியில் முழு ஒன்றிப்பைக் கொண்டு வருவதற்கு இடைவிடாமல்
உழைப்போம் என்றும் கேட்டுக்கொண்ட அவர், செபம் மற்றும் குழுவாகச் சேர்ந்து உழைப்பதன் மூலம்,
“அவர்கள் எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக”(யோவா.17,21) என்ற நமது மீட்பரின் விண்ணப்பத்திற்கு
நம்மால் பதில் சொல்ல முடியும் எனவும் தெரிவித்தார்.