2012-09-17 15:28:57

திருத்தந்தையின் லெபனன் திருப்பயண நிறைவு


செப்.17,2012. லெபனன் நாட்டுக்கானத் தனது மூன்று நாள் மேய்ப்புப்பணித் திருப்பயணத்தை நிறைவுசெய்து இஞ்ஞாயிறு உள்ளூர் நேரம் இரவு 9.34 மணிக்கு உரோம் சம்ப்பினோ இராணுவ விமானநிலையத்தை வந்தடைந்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
லெபனன் திருப்பயணத்தை நிறைவுசெய்து இத்தாலி திரும்பியுள்ள திருத்தந்தைக்கு இனியநல் வரவேற்பளித்து செய்தி அனுப்பியுள்ள இத்தாலிய அரசுத் தலைவர் ஜார்ஜோ நாப்போலித்தானோ, இப்பயணத்தில் திருத்தந்தை சந்தித்த லெபனன் மக்கள் மற்றும் மத்திய கிழக்குப் பகுதி மக்கள் அனைவருக்கும் இப்பயணம் ஊக்கமூட்டுவதாக இருக்கின்றது என்று கூறியுள்ளார்.
கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே உரையாடலைப் புதுப்பிக்கவும், மத்திய கிழக்குப் பகுதியில் சமய சுதந்திரத்துக்கும் திருத்தந்தை விடுத்துள்ள அழைப்பைப் பாராட்டியுள்ள நாப்போலித்தானோ, தான் திருத்தந்தையை மீண்டும் சந்திக்க விருப்பம் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.








All the contents on this site are copyrighted ©.