சிரியாவில் வன்முறை களையப்பட உதவுமாறு ஐநா. வில் திருப்பீட அதிகாரி விண்ணப்பம்
செப். 17, 2012. பதட்ட நிலைகளும் வன்முறைகளும் தூண்டப்படும் சூழல்களில் நாம் மௌனம்
காக்கமுடியாது, பேச்சுவார்த்தை மற்றும் ஒப்புரவிற்கான அர்ப்பணத்திற்கு நாம் முக்கியத்துவம்
கொடுத்துச் செயல்பட வேண்டும் என அழைப்பு விடுத்தார் பேராயர் சில்வானோ தொமாசி. ஜெனீவாவிலுள்ள
ஐ.நா. அமைப்புகளுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப்பார்வையாளர் பேராயர் தொமாசி, ஐநா மனித
உரிமைகள் அவைக் கூட்டத்தில் சிரியாவின் இன்றைய நிலைகள் குறித்து உரையாற்றியபோது இவ்வாறு
தெரிவித்தார். சிரியாவிற்குள் இடம்பெறும் வன்முறைகளில் இதுவரை ஏறத்தாழ 30,000 பேர்
உயிரிழந்துள்ளது, 2இலட்சத்து ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்டோர் அகதிகளாகியுள்ளது, 12 இலட்சம்
பேர் நாட்டிற்குள்ளேயே புலம்பெயர்ந்துள்ளது ஆகியவைகள் பற்றியும் தன் கவலையை வெளியிட்டார்
பேராயர். அனைத்துலக நாடுகளும் தங்கள் சுயநலப்போக்குகளை புறந்தள்ளி, சிரியாவிற்கு ஆயுதம்
வழங்குவதைக் கைவிட்டு, அதற்குப் பதிலாக ஒப்புரவு குறித்த எண்ணங்களை அங்கு இறக்குமதி செய்ய
வேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார் ஐநா விற்கானத் திருப்பீட பிரதிநிதி பேராயர் தொம்மாசி.