திருத்தந்தை : மத்திய கிழக்குப் பகுதிக்கான அப்போஸ்தலிக்க ஏடு, திருச்சிலுவையின் வெற்றியில்
ஒரு விசுவாச செயல்
செப்.15,2012. “மத்திய கிழக்கில் திருஅவை” என்ற, மத்திய கிழக்குப் பகுதிக்கான சிறப்பு
ஆயர் மாமன்றத்தின் தீர்மானங்கள் அடங்கிய அப்போஸ்தலிக்க ஏட்டில் கையெழுத்திட்ட செபவழிபாட்டில்
திருத்தந்தை ஆற்றிய மறையுரையின் சுருக்கம்....
செப்டம்பர் 14 திருச்சிலுவையின்
மகிமை விழா. கொல்கொத்தா மற்றும் கிறிஸ்துவின் கல்லறை மீது Constantine பேரரசர் கட்டிய
கிறிஸ்துவின் உயிர்ப்புப் பசிலிக்காவின் திருநிலைப்பாட்டைக் கொண்டாடும் விதமாக, கீழை
நாடுகளில் 335ம் ஆண்டிலிருந்து திருச்சிலுவை திருவிழா சிறப்பிக்கப்பட்டு வருகிறது. இந்த
மத்திய கிழக்கில் திருஅவை என்ற அப்போஸ்தலிக்க ஏடு, இந்தத் திருச்சிலுவையின் மகிமை விழாவின்,
இன்னும் சிறப்பாக, 'Christos என்ற கிரேக்கச் சொல்லின் Chi-Rho ஆகிய முதல் இரண்டு எழுத்துக்களின்
ஒளியில் வாசித்து புரிந்துகொள்ளப்பட வேண்டுமெனக் கருதுகிறேன். இம்முறையில் வாசிப்பதன்
மூலம், திருமுழுக்குப் பெற்ற ஒவ்வொரு மனிதரது மற்றும் திருஅவையின் தனித்துவம் போற்றப்படும்.
அதேசமயம், கிறிஸ்தவர்களின் ஒன்றிணைந்த வாழ்வு வழியாகச் சாட்சியமும் பகர முடியும். கிறிஸ்தவ
ஒன்றிப்பும் சாட்சியமும் கிறிஸ்துவின் சிலுவைமரணம் மற்றும் உயிர்ப்பில், பாஸ்காப் பேருண்மையில்
அடித்தளத்தைக் கொண்டிருக்கவில்லையா? என்ற கேள்வியை எழுப்பினார் திருத்தந்தை. இன்னல்கள்
மற்றும் துன்பமான நேரங்களில் கிறிஸ்தவர்கள், திருச்சிலுவையின் மகிமையைப் புறக்கணிக்கவும்
அல்லது மறக்கவும் சோதிக்கப்படக்கூடும். ஆனால் இந்நேரங்களில்தான் வெறுப்பை அன்பும், பழிவாங்குதலை
மன்னிப்பும், அதிகாரத்தைத் தொண்டும், பெருமையை அடக்கமும், பிரிவினைகளை ஒன்றிப்பும் வெற்றிகொள்வதை
நாம் கொண்டாட அழைக்கப்படுகிறோம். மத்திய கிழக்கில் திருஅவையின் தற்போதைய நிலைமையை ஆராய்ந்த
மாமன்றத் தந்தையர்கள், அப்பகுதியின் இன்பங்களையும் போராட்டங்களையும், பயங்களையும் நம்பிக்கைகளையும்
அலசினர். இதன்மூலம் அப்பகுதியில் மனித மற்றும் பொருளாதாரத் துன்பங்களை அனுபவிக்கும் பலரின்
குரல்களை அகிலத் திருஅவையும் கேட்க முடிந்தது. எனவே, திருச்சிலுவையின் மகிமை விழாவின்
ஒளியில், இந்த அப்போஸ்தலிக்க ஏட்டைப் பலனுள்ள விதத்தில் நடைமுறைப்படுத்துவதன் கண்ணோட்டத்தில்,
நான் மத்திய கிழக்குப் பகுதி மக்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். அஞ்சாதீர்கள். விசுவாசத்தின்
தூய்மையிலும், உண்மையிலும் உறுதியாக இருங்கள். இதுவே மகிமைப்படுத்தப்பட்ட திருச்சிலுவையின்
மொழி. இதுவே திருச்சிலுவையின் மடமை. இந்த மடமை, நமது துன்பங்களை இறைவன் மீதான அன்பாக
மாற்றும். அயலார் மீது கருணையைக் காட்டச்செய்யும். மேலும், இந்த ஏடு ஒரே கடவுளின் மீதான
விசுவாசத்தில் அடிப்படையைக் கொண்ட உண்மையான பல்சமய உரையாடலுக்குத் திறந்த மனத்தைக் காட்டுகின்றது.
நற்செய்தி உண்மை மற்றும் அன்பில் கிறிஸ்தவ ஒன்றிப்புக்கும் வழி அமைத்துள்ளது. இந்த ஏடானது
கிறிஸ்துவின் சீடர்கள் ஒவ்வொருவரும் தங்களது திருமுழுக்கு வாழ்வை முழுமையாக வாழ்ந்து
அதைப் பிறருக்கு வழங்கவும் வழி சொல்கிறது. இந்தத் திருச்சிலுவை அடையாளத்தில் நீ வெற்றி
பெறுவாய் என்று Constantine பேரரசருக்கு கிறிஸ்து கொடுத்த வாக்குறுதியை நினையுங்கள்.
மத்திய கிழக்குத் திருஅவைகளே, பயப்படாதீர்கள். சிறு மந்தையே பயப்பட வேண்டாம். உண்மையில்
ஆண்டவர் உங்களோடு இருக்கிறார். உங்களுக்கு நெருக்கமாக இருக்கிறார். அகிலத் திருஅவையும்
உங்களோடு நடந்து உங்களோடு இருக்கிறது. மத்திய கிழக்குப் பகுதி மக்கள் அனைவரும் அமைதி,
சகோதரத்துவம், சமய சுதந்திரம் ஆகியவற்றில் வாழ இறைவன் அருள்பொழிவாராக. கடவுள் உங்கள்
எல்லாரையும் ஆசிர்வதிப்பாராக என்று அரபு மொழியிலும் சொல்லி இவ்வுரையை நிறைவு செய்தார்
திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.