2012-09-13 16:43:13

சென்னை நகரில் இவ்வாண்டு 962 பேர் வாகன விபத்தில் பலி


செப்.13,2012 சென்னையில் இந்த ஆண்டு, 962 பேர், வாகன விபத்தில் இறந்துள்ளனர்; அவர்களில், 436 பேர், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியவர்கள் என சென்னை மாநகர காவல்துறை உயர் அதிகாரி திரிபாதி கூறினார்.
சென்னை நகரில், இந்த செப்டம்பர் வரையிலான ஓராண்டில், 962 பேர், வாகன விபத்தில் இறந்துள்ளனர், அதில் 446 பேர், இரு சக்கர வாகன விபத்தில் பலியானவர்கள் என்ற காவல்துறை உயர் அதிகாரி, தலைக்கவசம் அணியாமல் பயணிக்கும்போது, காவல்துறையினரைக் கண்டவுடன் மட்டும் அவசரமாக அதனை அணியும் பழக்கம் பல பேரிடம் உள்ளது என்பதை எடுத்துரைத்து, தலைக்கவசம் அணியாததால், இறப்பு விழுக்காடு அதிகரித்திருப்பதை பொதுமக்கள் உணர வேண்டும் என்ற வேண்டுகோளையும் முன்வைத்தார்.
காவல்துறை உயர் அதிகாரி திரிபாதி மேலும் கூறுகையில், சென்னை மாநகரில், கடந்த இரு மாதங்களில் நடந்த, 289 குற்றச் சம்பவங்களில், 262 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர் எனவும், அவர்களிடமிருந்து, 3 கோடியே 60 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள 1,378 சவரன் தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள் மற்றும் 16 இலட்சத்து85 ஆயிரம் ரூபாய் மீட்கப்பட்டுள்ளன எனவும் தெரிவித்தார்.







All the contents on this site are copyrighted ©.