செப். 10, 2012. உள்நாட்டு மோதல்களால் குடிபெயர்ந்துள்ள சிரியா நாட்டு மக்களுக்குத் தன்
மனிதாபிமானப் பணிகளை அதிகரித்துள்ளது கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு. சிரியா நாட்டிற்குள்
குடிபெயர்ந்துள்ள மக்களுக்கு உணவுப் பொருட்களை விநியோகித்து வருவதாகக் கூறும் இக்கத்தோலிக்க
அமைப்பு, பல இடங்களில் மாணவச் சீரணிப்படையினர் உதவியுடன் இப்பணிகளை மேற்கொள்வதாகவும்
தெரிவித்துள்ளது. அண்மை நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டுள்ள சிரியா மக்களுள் 13,000க்கும்
மேற்பட்டோருக்கு நேரடி உதவிகளை ஆற்றி வருகின்றது இப்பிறரன்பு அமைப்பு. சிரியாவிலிருந்து
வெளியேறி அண்மை நாடுகளான ஜோர்டன், துருக்கி, லெபனன் மற்றும் ஈராக்கில் வாழும் ஏறத்தாழ
இரண்டு இலட்சத்து ஐம்பது ஆயிரம் சிரியா அகதிகளிடையேயும் தன் பணிகளை ஆற்றி வருகின்றது
காரித்தாஸ் அமைப்பு.