மத்திய கிழக்கு நாடுகளில் மறைந்து கொண்டிருக்கும் திருஅவைகளைக் காப்பாற்றுவதற்குத் திருத்தந்தையிடம்
வேண்டுகோள்
செப்.07,2012. மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து கிறிஸ்தவர்கள் வெளியேறுவதைத் தடுப்பதற்குத்
திருத்தந்தை உதவுமாறு அவரின் லெபனன் திருப்பயணத்தின்போது கோரிக்கை முன்வைக்கப்படும் என்று
ஈராக்கின் கிர்குக் பேராயர் லூயிஸ் சாக்கோ கூறினார். இம்மாதம் 14 முதல் 16 வரை லெபனன்
நாட்டில் திருப்பயணம் மேற்கொள்ளும் திருத்தந்தையிடம் மத்திய கிழக்கு நாடுகளின் திருஅவைத்
தலைவர்கள் இந்த விண்ணப்பத்தை முன்வைக்கவிருப்பதாக மேலும் கூறினார் பேராயர் சாக்கோ. மத்திய
கிழக்கு நாடுகளில் மக்களாட்சி மற்றும் சுதந்திரம் குறித்து அரசியல் அளவிலான கலந்துரையாடல்கள்
இடம்பெற்று வருவது ஒருபுறமிருக்க, மறுபுறம் தீவிரவாதமும், பிரிவினைவாதமும் வளர்ந்து
வருகின்றதெனவும் அவர் கூறினார். மத்திய கிழக்குப் பகுதியிலிருந்து கிறிஸ்தவர்கள் வெளியேறுவது
குறைவதாகத் தெரியவில்லை எனவும் பேராயர் சாக்கோ கவலை தெரிவித்தார்.