இலங்கையில் மனித உரிமை மீறல்கள் நிறுத்தப்படுமாறு ஆயர்கள் வேண்டுகோள்
செப்.07,2012. இலங்கையில் பல்வேறு வடிவங்களில் இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல்களுக்கு
எதிரானத் தங்களது கண்டனத்தை வெளியிட்டுள்ளனர் அந்நாட்டு ஆயர்கள். மருத்துவமனைகளில்
சேர்க்கப்படும் அளவுக்கு, ஏன் சில சமயங்களில் மரணத்தில் முடியும் அளவுக்குச் சிறைக்கைதிகளுக்கு
எதிரான வன்முறைகள் இடம்பெறுவதையும், விவசாயிகளுக்கு எதிரான அச்சுறுத்தல்கள், பதிலடித்
தாக்குதல்கள், கல்வித்துறையில் சீர்திருத்தம் கேட்பவர்க்கெதிரான அடக்குமுறைகள் என இலங்கையில்
இடம்பெறும் பல்வேறு மனித உரிமை மீறல்களைக் குறிப்பிட்டுள்ளனர் ஆயர்கள். தற்போது நாடு
எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு அரசியல்ரீதியாகத் தீர்வு காணப்படுமாறு தங்கள் அறிக்கையில்
வலியுறுத்தியுள்ள இலங்கை ஆயர்கள், அனைத்துக் குடிமக்களின் மனித உரிமைகள் உறுதி செய்யப்படுமாறும்
கேட்டுள்ளனர். கடந்த காலத்தில் நாடு எதிர்கொண்டுள்ள அனைத்தையும் நோக்கும்போது தற்போது
நாட்டுக்கு அமைதி தேவைப்படுகின்றது என்றும், அரசியல் தலைவர்கள் இதற்காக உழைக்குமாறும்
இலங்கை ஆயர்களின் அறிக்கை கூறுகின்றது.