வத்திக்கான் அதிகாரி : அதிகாரம், பணிகளுக்கெனத் தரப்பட்டுள்ள ஒரு கருவி
செப்.06,2012. அதிகாரம் என்பது பணிகளுக்கெனத் தரப்பட்டுள்ள ஒரு கருவி என்பதை இவ்வுலகமும்,
திருஅவையும் உணர்ந்தால், உலகிலும், திருஅவையிலும் அதிகாரம் தவறான வழிகளில் பயன்படுத்தப்படுவது
நிறுத்தப்படும் என்று வத்திக்கான் அதிகாரி ஒருவர் கூறினார். இச்செவ்வாய், புதன் ஆகிய
இருநாட்கள் பிரித்தானியாவின் Twickenham என்ற நகரில் கத்தோலிக்க இறையியலாளர்கள் இணைந்து
நடத்திய ஒரு கருத்தரங்கில் கலந்து கொண்ட விசுவாசக் கோட்பாடு பேராயத்தின் அதிகாரி பேரருள்திரு
Charles Scicluna, வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியொன்றில் இவ்வாறு கூறினார். அதிகாரத்தைச்
சரியான முறையில் நாம் புரிந்துகொள்ளாதபோது அதைத் தவறான முறையில் பயன்படுத்தத் துணிகிறோம்
என்று கூறிய பேரருள்திரு Scicluna, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதன் ஓர் அங்கமாக,
ஒரு சில குருக்கள் இளவயதுடையோரை பாலியல் ரீதியான வன்முறைகளுக்கு உட்படுத்தினர் என்று
கூறினார். "அதிகாரத்தை மீட்பது: உலகிலும், திருஅவையிலும் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதிலிருந்து
மீள்வது" என்ற தலைப்பில் நடைபெற்ற இக்கருத்தரங்கு இப்புதனன்று நிறைவுபெற்றது.