நைரோபியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த பல்சமயக் கருத்தரங்கு
செப்.06,2012. கிறிஸ்தவ, இஸ்லாமிய, இந்து சமயங்களைச் சார்ந்த 26 குழுக்கள், சுற்றுச்
சூழல் பாதுகாப்பு என்ற கருத்தில் ஒருங்கிணைந்து இம்மாதம் 18 முதல் 20 முடிய ஆப்ரிக்காவின்
நைரோபியில் ஒரு கருத்தரங்கை நடத்தவுள்ளனர். ‘சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு அனைத்து
மதங்களும்’ என்ற ARC அமைப்பைச் சேர்ந்த இந்தக் குழுவில் உலகெங்கும் 18 கோடியே, 38 இலட்சத்து
60 ஆயிரம் உறுப்பினர்கள் இணையதளத்தின் வழியாக இணைக்கப்பட்டுள்ளனர் என்று ICN கத்தோலிக்கச்
செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இவ்வமைப்பைச் சார்ந்தவர்கள் உகாண்டாவில் 25 இலட்சம்
மரக்கன்றுகளை இதுவரை நட்டுள்ளனர் என்றும், தொடர்ந்து 50 இலட்சம் கன்றுகளை நடும் திட்டத்தை
மேற்கொண்டுள்ளனர் என்றும் சொல்லப்படுகிறது. அதேபோல், Ghana வில் உள்ள கிறிஸ்தவ அமைப்பைச்
சேர்ந்தவர்கள் 70 இலட்சம் மரங்களை அடுத்த ஏழு ஆண்டுகளில் நடுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்
என்றும் கூறப்படுகிறது. சமயங்களைத் தாண்டி, சுற்றுச்சூழலைக் காக்க இவ்வமைப்பினர் எடுத்துவரும்
முயற்சிகளை அனைத்து மதத் தலைவர்களும் பாராட்டி வருகின்றனர்.