கொல்கத்தாப் பேராயர் : அன்னை தெரேசா தன்வாழ்வாலும்,
பணியாலும் உலகை ஒருங்கிணைத்தார்
செப்.06,2012. மதம், இனம், மொழி, நிறம் என்ற அனைத்து குறுகியப் பிரிவுகளையும் தாண்டி,
அன்னை தெரேசா தன் வாழ்வாலும், பணியாலும் உலகை ஒருங்கிணைத்தார் என்று கொல்கத்தாப் பேராயர்
தாமஸ் டி'சூசா கூறினார். செப்டம்பர் 5 இப்புதனன்று கொண்டாடப்பட்ட அருளாளர் அன்னை தெரேசாவின்
திருநாளன்று தன் மறையுரையை வழங்கிய பேராயர் டி'சூசா, அன்னையைத் தன் வாழ்வில் சந்தித்த
நேரங்களையெல்லாம் நினைவு கூர்ந்து பேசினார். விசுவாச ஆண்டைத் துவங்கவிருக்கும் நாம்,
நற்செய்தியைப் பரப்புவதில் புதிய வழிகள் என்று எண்ணிவரும் இவ்வேளையில், அன்னை தெரேசாவின்
வாழ்வும் பணிகளும் நமக்குப் புதிய வழிகளைக் காட்டுகின்றன என்று பேராயர் சுட்டிக்காட்டினார். 1997ம்
ஆண்டு செப்டம்பர் 5ம் தேதி இறையடி சேர்ந்த அன்னை தெரேசாவை, 2003ம் ஆண்டு அருளாளர் திருத்தந்தை
இரண்டாம் ஜான்பால், அருளாளர் நிலைக்கு உயர்த்தினார். அன்னையின் திருநாள் செப்டம்பர் மாதம்
5ம் தேதி கொண்டாடப்படுகிறது.