செப். 05, 2012. திருத்தந்தையரின் இல்லமான காஸ்தல் கந்தோல்ஃபோவில் தன் கோடை விடுமுறையைச்
செலவிட்டுவரும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், செப்டம்பர் மாதத்தின் இம்முதல் புதனன்று
விசுவாசிகளைச் சந்தித்து, பொதுமறைபோதகத்தை வழங்குவதற்கென ஹெலிகாப்டரில் வத்திக்கான் வந்து,
திருத்தந்தை ஆறாம் பவுல் மண்டபத்தில் மக்களைச் சந்தித்து உரை வழங்கிய பின்னர் அதே ஹெலிகாப்டரில்
காஸ்தல் கந்தோல்ஃபோ இல்லத்திற்குத் திரும்பிச் சென்றார். புதிய ஏற்பாட்டு திருவெளிப்பாடு
நூலின் துவக்கத்தில் காணப்படும் 'செபம்' குறித்தச் சிந்தனைகளை, திருத்தந்தை ஆறாம் பவுல்
மண்டபத்தில் கூடியிருந்த மக்களோடு பகிர்ந்துகொண்டார் திருத்தந்தை. திருவெளிப்பாடு
நூல் கடினமான ஒன்று எனினும், அது பல வளங்களைத் தன்னுள்ளே அடக்கியது. இந்நூலின் துவக்க
வரிகளே நிறைய எடுத்துரைக்கின்றன. செபம் என்றால் என்ன என்பதையும், எல்லாவற்றிற்கும் மேலாக,
நம்முடன் பேசும் இறைவனுக்குச் செவிமடுப்பதே செபம் என்பதையும் அவை நமக்கு எடுத்துரைக்கின்றன.
இன்று, பயனற்ற பல வார்த்தைகளின் மத்தியில் மனிதர்கள் பலர், பிறருக்குச் செவிமடுக்கும்,
ஏன், இறைவனுக்குச் செவிமடுக்கும் பழக்கத்தையே விட்டொழித்து விட்டனர். செபம் என்பது நம்
தேவைகளை நிறைவேற்றுமாறு இறைவனை வேண்டும் வெறும் வார்த்தைகள் அல்ல, மாறாக, நமக்கு மீட்பையும்
நம்பிக்கையையும் பலத்தையும் வழங்கிய இயேசு கிறிஸ்துவை நமக்குக் கொடையாக வழங்கிய இறைவனுக்கு,
அவரின் அன்புக்கு, நாம் வழங்கும் புகழ்மாலையாக அது துவக்கப்படவேண்டும். நம் வாழ்வுக்குள்
கிறிஸ்துவை வரவேற்க வேண்டும், மற்றும் நம் கிறிஸ்தவ வாழ்வை வளப்படுத்தும், ஆழப்படுத்தும்
வகையில், கிறிஸ்துவுக்கு 'ஆம்' சொல்பவர்களாக வாழவேண்டும். நம் வாழ்விலும், வரலாற்றிலும்
இறை இருப்பின் பொருளை, நம் தொடர்ந்த செபம் நமக்கு வெளிப்படுத்தும். சிலுவையில் அறையப்பட்டு
உயிர்த்த இயேசு, நம்மிடையே குடிகொண்டிருப்பது குறித்த விழிப்புணர்வை, மற்றவர்களோடு இணைந்து
செபித்தல், குறிப்பாக, திருவழிபாட்டுச் செபம், மேலும் ஆழப்படுத்தும். இவ்வாறு, எவ்வளவு
அதிகமாக நாம் கிறிஸ்துவை அறிந்து, அன்பு கூர்ந்து, பின்செல்கின்றோமோ, அவ்வளவு அதிகமாக
நாம் அவரைச் செபத்தில் சந்திக்க விரும்புவோம். ஏனெனில், அவரே நம் அமைதி, நம்பிக்கை மற்றும்
நம் வாழ்வின் பலம், என தன் புதன் மறைபோதகத்தை வழங்கினார் திருத்தந்தை. மறைபோதகத்தின்
இறுதியில், ஹங்கரி நாட்டின் தலைநகரான புதபெஸ்தில் அண்மையில் நிறைவுற்ற 'ஜென்ஃபெஸ்ட்'
கொண்டாட்டத்தில் பங்குபெற்ற Focolare இயக்கத்தின் அங்கத்தினர்களுக்குத் தன் வரவேற்பையும்
வாழ்த்துக்களையும் தெரிவித்தார் திருத்தந்தை. இளையோரே! உறவுப் பாலங்களைத் துணிவுடன் கட்டியெழுப்புவதன்
மூலம் மனிதகுலம் எனும் குடும்பத்தின் ஒன்றிப்பை ஊக்குவிக்கும் கிறிஸ்துவின் அழைப்பை இதயத்தில்
ஏற்றுள்ளீர்கள். ஆகவே, நான் உங்களுக்கு ஊக்கமளிக்கிறேன். உங்களுடைய கத்தோலிக்க விசுவாசத்தில்
உறுதியாயிருங்கள். இயேசு கிறிஸ்துவை உங்கள் வாழ்வில் சந்திப்பதன் மூலம் உங்களுக்குக்
கிட்டும் எளிமையான மகிழ்வு, உண்மை அன்பு, ஆழமான அமைதி ஆகியவை உங்கள் சொந்த நாடுகளின்
இளையோரிடையே சுடர்விடும் சாட்சிகளாக உங்களை மாற்றுவதாக. இளையோரை இவ்வாறு வாழ்த்தியபின்,
அங்கு குழுமியிருந்த அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார் திருத்தந்தை
16ம் பெனடிக்ட்.