2012-09-04 16:30:30

செப்டம்பர் 05, கவிதைக் கனவுகள் மீண்டும் நீ பிறக்க வேண்டும்


செப்டம்பர் 5, அருளாளர் அன்னை தெரேசா இறையடி சேர்ந்த நாள். அந்த அன்னைக்குக் கவிதை வடித்திருப்பவர் ஜனா சிதம்பரம்.

இறைவன் படைத்த படைப்பிலேயே
எல்லையில்லாத கருணையை
அள்ளி வழங்கிய அருட்கொடை நீ !
உன்னிதயம் இந்த
பூமிப்பந்தை விட விசாலமானது.
நாடுகளைப் பிரிக்கும்
எல்லைக் கோடுகள் இல்லை
உன் உலகளாவிய மனதிற்கு.
மக்களைப் பிரிக்கும்
சாதியும், மதமும்
உன் கூப்பியக் கரத்திற்கு
முன் மதியிழந்து செயல் மறக்கும்.
கருப்பு, வெள்ளை, .........
நிறங்களின் பேதம் உனக்கில்லை.

எல்லா எளியோருக்காகவும்
நீ கண்ணீர் உதிர்த்தாய்.
உன் மறைவுக்கு இவ்
உலகமே கண்ணீர் வடித்தது.
உலக சரித்திரத்தில் உன்னளவு
மக்களை வசீகரித்தப் பெண்ணில்லை.
நீ உடுத்திய வெண் புடவை
பூமிப் பந்து போர்த்திய
மானுட நேயத்தின்
தேசிய உடையானது.
உலக மக்கள்
உன் இழப்பிற்குப் பிறகு
ஒட்டு மொத்தமாய் இறைவனிடம்
வேண்டும் வரம், ........
மீண்டும் நீ பிறக்க வேண்டும்.








All the contents on this site are copyrighted ©.