கட்டாயக் காணாமல்போதல் நிறுத்தப்படுவதற்கு ஐ.நா. வல்லுனர்கள் கோரிக்கை
ஆக.31,2012. ஒரு நாட்டில் குடிமக்கள் காணாமல்போவது, கடுங்கொடிய குற்றமாக நோக்கப்படுவது
மட்டுமின்றி மனித சமுதாயத்தின் மூல ஆதாரத்தையே புறக்கணிக்கும் ஒரு செயலாகக் கருதப்படும்
என்று ஐ.நா. வல்லுனர்கள் குழு ஒன்று எச்சரித்துள்ளது. இவ்வியாழனன்று 2வது அனைத்துலக
காணாமல்போனோர் தினம்(ஆகஸ்ட்30) கடைப்பிடிக்கப்பட்டதையொட்டி அறிக்கை வெளியிட்ட ஐ.நா. வல்லுனர்கள்
குழு, நாடுகளில் மக்கள் கட்டாயமாகக் காணாமல்போவது ஒரு சமுதாயத்தின் ஆழமான விழுமியங்களுக்கு
முரணானது என்றும் கூறியுள்ளது. பயங்கரவாதத்தை அல்லது திட்டமிட்ட குற்றக்கும்பல்களை
ஒடுக்குவதற்கு எதிரான நடவடிக்கைக்கும், சனநாயகம், பேச்சு சுதந்திரம், சமய சுதந்திரம்
போன்ற நியாயமான உரிமைப் போராட்டங்களை அடக்குவதற்கும் இத்தகைய நடவடிக்கைகள் பயன்படுத்தப்படுகின்றன
என்று நியாயம் சொல்வது ஏற்றுக்கொள்ளப்படவும் சகித்துக்கொள்ளப்படவும் முடியாதது என்றும்
அவ்வல்லுனர்கள் குழுவின் அறிக்கை கூறுகின்றது. கட்டாயக் காணாமல்போதல் நடவடிக்கையிலிருந்து
மக்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று ஐ.நா.பொது அவை அறிக்கை வெளியிட்ட 20வது
ஆண்டு, இந்த 2012ம் ஆண்டில் நினைவுகூரப்படுகின்றது.