ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தலைவர் : சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதற்காக மனம் வருந்த வேண்டும்
ஆக.29,2012. சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதற்காகச் செபிக்கும்போது, அச்சுற்றுச்சூழலை
சிறிய அல்லது பெரிய அளவில் ஒவ்வொருவரும் மாசுபடுத்தி வருவதற்காக இறைவனிடம் மன்னிப்பும்
கேட்குமாறு பரிந்துரைத்துள்ளார் Constantinople Ecumenical ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தலைவர்
Bartholomew. துருக்கி நாட்டு Istanbulலில் தலைமையகத்தைக் கொண்டுள்ள உலக ஆர்த்தடாக்ஸ்
சபைத் தலைவராகிய முதுபெரும் தலைவர் Bartholomew, வருகிற செப்டம்பர் முதல் தேதி கடைப்பிடிக்கப்படவிருக்கும்
சுற்றுச்சூழல் செப நாளுக்குத் தயாரிப்பாக வெளியிட்டுள்ள செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார். மனித
சமுதாயம் வாழ்வதற்கு ஏற்ற பூமியாக இறைவன் இந்த உலகைப் படைத்தார் என்று தனது செய்தியில்
குறிப்பிட்டுள்ள முதுபெரும் தலைவர் Bartholomew, இந்தச் சுற்றுச்சூழலை இறைவன் பாதுகாக்குமாறு
செபிக்கும்போது, நாம் அதை அழிக்கும் பாவச்செயலுக்காகவும் மனம் வருந்த வேண்டும் என்று
சொல்லியுள்ளார். இந்தச் செப நாளை 1989ம் ஆண்டிலிருந்து Istanbul ஆர்த்தடாக்ஸ் சபை
கடைப்பிடித்து வருகிறது. இச்செப நாள் ஒரு முக்கியமான கிறிஸ்தவ ஒன்றிப்பு முயற்சி என்று
திருத்தந்தை 16ம் பெனடிக்டும் பாராட்டியுள்ளார்.