2012-08-27 15:45:41

கவிதைக் கனவுகள் – உங்களில் யாருக்கேனும்... (கவிஞர் கி.விஜயலட்சுமி)


உங்களில் யாருக்கேனும்
கரங்களில் வலுவும்
வாழ்வுச் சுழிப்பில்
துணிவும் இருப்பின்
கொட்டிக் கிடந்து
எட்டி நின்று
பரிகாசம் காட்டும்
அந்த வெள்ளிப் பூக்களைப் பறியுங்கள்.

உங்களில் யாருக்கேனும்
புதுமைப் பொலிவில்
நம்பிக்கை துளிர்த்தால்
கொள்ளை அழகாய் மின்னும்
அழகுகளை எடுத்து வந்து
பத்திரப் படுத்துங்கள்.

பிரச்சனை நெரிசலில்
அனுபவச் சூட்டில்
வெந்து வெளிவந்து
கனவின் விரிப்பில்
அலுப்பாயத் துவளுகையில்
பறித்தது மலரோ
எடுத்தது விளக்கோ
அது எதுவாயினும்
விழித்துப் பாருங்கள்.

நினைந்து பார்க்கையில்
நம் வாழ்க்கையும்
ஒரு நட்சத்திரம்தான்.







All the contents on this site are copyrighted ©.