இரண்டு இலட்சம் சிரிய அகதிகள் அண்மை நாடுகளில் குடிபுகுந்துள்ளனர்
ஆக.27,2012. சிரியாவில் மோதல்கள் தொடர்வதால் அந்நாட்டிலிருந்து இரண்டு இலட்சத்திற்கும்
மேற்பட்ட மக்கள் அகதிகளாக அண்மை நாடுகளுக்குள் அடைக்கலம் தேடியுள்ளதாக ஐநாவின் அகதிகளுக்கான
அமைப்பு அறிவித்துள்ளது. கடந்த ஏழு நாட்களில் மட்டும் 30 ஆயிரம் பேர் அகதிகளாக துருக்கி,
லெபனன், ஜோர்டன் மற்றும் ஈராக் ஆகிய நாடுகளில் அடைக்கலம் தேடியுள்ளதாக உரைத்த ஐநாவின்
அதிகாரப்பூர்வப் பேச்சாளர் ஏட்ரியன் எட்வர்ட்ஸ், அகதிகளாக வந்துள்ளோரில் பெருமெண்ணிக்கையினோர்
18 வயதிற்கு உட்பட்டவர்கள் எனவும், பெற்றோர் துணையின்றி வந்துள்ள சிறார்களும் இதில் அடங்குவர்
எனவும் தெரிவித்தார். அகதிகளுக்கான ஐநா அமைப்பின் கணிப்பின்படி, சிரியாவிற்குள் ஏறத்தாழ
12 இலட்சம் பேர் இடம்பெயர்ந்தவர்களாக வாழ்ந்து வருகின்றனர், மேலும் 25 இலட்சம் பேருக்கு
மனிதாபிமான உதவிகள் தேவைப்படுகின்றன.