ஆக.27,2012. அசாமில் வன்முறைகள் முடிவுக்கு வந்து அமைதி நிலவவேண்டும் என்ற விண்ணப்பத்துடன்
தூய பவுல் புதல்வியர் சபை ஏற்பாடு செய்த பல்சமய செப வழிபாடு இச்சனிக்கிழமையன்று Guwahatiயில்
இடம்பெற்றது. மனித சமுதாயத்தைக் கட்டியெழுப்பவும் சமூகத்தில் அமைதியை நிலைநிறுத்தவும்
நம்மிடமுள்ள நிதி, அறிவு, ஆர்வம் என அனைத்தையும் பயன்படுத்தவேண்டும் என அறிவித்தார் இச்செபவழிபாட்டிற்கு
ஏற்பாடு செய்த இச்சபையின் அருட்சகோதரி. ஃபிலோ ஜோசப். இந்தப் பல்சமய செபவழிபாட்டில்
கலந்துகொண்ட Guwahatiயின் முன்னாள் பேராயர் தாமஸ் மேனம்பரம்பில், வன்முறைக்குக் காரணமானவர்களின்
மனதில் கூட அமைதிக்கான ஏக்கம் இருக்கும் என்று கூறினார். அமைதிக்கான விருப்பம் செபத்துடன்
இணைக்கப்படும்போது அது மிகவும் சக்தி வாய்ந்ததாக மாறுகிறது எனவும் கூறினார் பேராயர். அழிவுக்குக்
காரணமானவர்களின் மனதிலும் அமைதியின் தேவை குறித்த உணர்வை உருவாக்க நாம் ஒவ்வொருவரும்
உழைக்கவேண்டும் என்ற அழைப்பையும் அனைத்து மத பிரதிநிதிகளிடம் விடுத்தார் பேராயர் மேனம்பரம்பில்.