இந்தியக் கிறிஸ்தவ மறைசாட்சிகள் தினத்தைக் கடைப்பிடிக்குமாறு மத்திய பிரதேச கிறிஸ்தவ
ஒன்றிப்பு அமைப்பு வேண்டுகோள்
ஆக.25,2012. ஆகஸ்ட் 26ம் தேதி இஞ்ஞாயிற்றுக்கிழமையை “இந்தியக் கிறிஸ்தவ மறைசாட்சிகள்”
தினமாகக் கடைப்பிடிக்குமாறு இந்தியாவின் அனைத்துக் கிறிஸ்தவர்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளது
மத்திய பிரதேச மாநிலத்தின் கிறிஸ்தவ ஒன்றிப்பு அமைப்பு ஒன்று. போபாலை மையமாகக் கொண்டு
செயல்படும், மத்திய பிரதேச இசை மகாசங் என்ற கிறிஸ்தவ ஒன்றிப்பு அமைப்பு, திருத்தூதர்
தோமையார் தொடங்கி, தங்களது கிறிஸ்தவ விசுவாசத்திற்காக உயிரிழந்தவர்களை நினைவுகூரும் விதமாக
ஆண்டுதோறும் மறைசாட்சிகள் தினத்தைக் கடைப்பிடிக்கும் நடவடிக்கையை ஊக்குவித்து வருகிறது. நான்காண்டுகளுக்கு
முன்னர் ஒடிசா மாநிலத்தின் கந்தமால் மாவட்டத்தில் கிறிஸ்தவர்க்கெதிரான வன்முறைகள் இடம்பெற்ற
பின்னர் இந்த மறைசாட்சிகள் தினத்தைக் கடைப்பிடிப்பதற்குக் கிறிஸ்தவர்களை ஊக்குவித்து
வருகிறது இவ்வமைப்பு. போபால் கத்தோலிக்க உயர்மறைமாவட்டத்தின் முயற்சியால் உருவாக்கப்பட்ட
இந்த மறைசாட்சிகள் தினத்தில் கிறிஸ்தவர்கள் திருப்பலி ஒப்புக்கொடுத்து இரத்த தான முகாம்களில்
இரத்த தானம் செய்யுமாறும் இசை மகாசங் அமைப்பு பரிந்துரை செய்கின்றது.