2012-08-23 16:07:36

கவிதைக் கனவுகள் – இறைவா! உன்னருள் வேண்டும்


இறைவா,
தடுமாறும் வாழ்க்கையிலே
தறிகெட்டலைந்து தடுக்கி வீழ்ந்தாலும்
நீர் என் வாழ்வினிலே
ஆணி வேராய் ஆழப் பதிந்திருக்கிறாய்.

இறைவா,
உன்னைத் தேடி ஊர் சுற்றி
காண்பவற்றிலெல்லாம் சுகம் கண்டு
உனைக் காணாது வருந்தி
களைத்துச் சோர்ந்திருந்த எனக்கு
உன்முகம் காட்டிச் சிரித்தாய்
எனக்குக் கடுத்திருந்தவர்களில்.
எனக்கடுத்திருப்பவர்களுக்காக
கேட்ட வரம் யாவும்
அருளிச் செய்தாய்.
பிறர் கேட்கின்ற வரம் யாவும்
கிடைக்கும் அருள் நீ செய்ய வேண்டும்

இறைவா,
துன்பங்கள் வாட்டினாலும்
விறைத்து மனம் ஓய்ந்தாலும்
காரணங்கள் கேட்காமல்
உனை நான் கைகூப்பித் தொழுதிடுவேன்.
காலமெல்லாம் களிப்பு மலர் தூவி
கண்ணீரால் உன் கால் கழுவி
உன் பெயர் சொல்லி
வாழ்ந்திடுவேன்.

இறைவா,
வாழ்வதும் உன் அருள்தான்
வளர் புகழும் உன் அருள்தான்
இறைவா உன்னைப் போற்றிடுவேன்
புகழ்ந்திடுவேன் உன் புகழை எந்நாளும்.







All the contents on this site are copyrighted ©.