எத்தியோப்பியப் பிரதமரின் மறைவுக்குத் திருத்தந்தையின் இரங்கல் செய்தி
ஆக.22,2012. இத்திங்களன்று காலமான எத்தியோப்பியப் பிரதமர் Meles Zenawiயின் மறைவுக்கு
ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்து திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இரங்கல் செய்தியை அனுப்பியுள்ளார். 57
வயதான Zenawi, 1991ம் ஆண்டு முதல் எத்தியோப்பியாவின் அரசுத் தலைவராகவும், 1995ம் ஆண்டிலிருந்து
அந்நாட்டின் பிரதமாராகவும் பணியாற்றியவர். பிரதமரின் மறைவு குறித்து அந்நாட்டு அரசுத்தலைவர்
Girma Wolde Giorgisக்கு திருத்தந்தையின் சார்பில் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்சிசியோ
பெர்தோனே அனுப்பியுள்ள இரங்கல் செய்தியில், மறைந்த பிரதமரின் குடும்பத்திற்குத் திருத்தந்தையின்
செபங்களைத் தெரிவித்துள்ளார். பிரதமர் Zenawiயின் மறைவு குறித்து அனுதாபச் செய்தி
அனுப்பியுள்ள ஐ.நா.வின் தலைமைச் செயலர் பான் கி மூன், நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்காகவும்,
சமுதாய மேம்பாட்டுக்காகவும் Zenawi அயராது உழைத்தார் என்பதைக் குறிப்பிட்டுள்ளார்.