இருள் நிறைந்த ஒரு குகைக்குள் சிரியா பயணிக்கிறது - சிரிய ஆர்த்தடாக்ஸ் பேராயர்
ஆக.22,2012. இருள் நிறைந்த ஒரு குகைக்குள் பயணிப்பதுபோல் சென்றுகொண்டிருக்கும் சிரியா,
குகையின் முடிவில் தெரியும் ஒளியை இன்னும் நம்பி நடக்கிறது என்று Aleppoவின் சிரிய ஆர்த்தடாக்ஸ்
பேராயர் Mar Gregorios Yohanna Abraham, கூறினார். சிரியாவில் தொன்றுதொட்டு நிலவி
வந்த சகிப்புத்தன்மை குறைந்து வருவதைக் குறித்து தன் கவலையை வெளியிட்ட பேராயர் Abraham,
வன்முறைகளைக் கைவிடுமாறு அனைத்து தரப்பினருக்கும் வேண்டுகோள் விடுத்தார். 'அரேபிய
வசந்தம்' என்ற பெயரில் பல அரபு நாடுகளில் ஆரம்பித்த புரட்சிகளின் ஒரு பகுதியாக சிரியாவிலும்
மக்கள் கிளர்ச்சி எழுந்தது என்பதைச் சுட்டிக்காட்டிய பேராயர் Abraham, இந்தக் கிளர்ச்சியால்
நாட்டில் மேலும் குழப்பங்கள் நிலவியுள்ளது பெரும் ஏமாற்றத்தைத் தருகிறது என்று கூறினார். உள்நாட்டுச்
சண்டையில் ஈடுபட்டுள்ள அனைவரும் ஆயுதங்களைக் களையவும், போரினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு
மனிதாபிமான உதவிகள் கிடைப்பதற்கு வழிவகைகள் செய்யவும் பேராயர் Abraham அழைப்பு விடுத்தார்.